Wednesday 30 November 2016

எய்ட்ஸ் எனும் அரக்கன்........?


மக்களிடையே HIV பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும்,எய்ட்ஸ்(AIDS)யினால் இறந்தவர்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாகவும் 1988 ஆம் ஆண்டில் இருந்து டிசம்பர் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

2013 ஆண்டு புள்ளிவிவரப்படி உலகம் முழுக்க 36 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் என்கிற பெறப்பட்ட நோய் எதிர்ப்பு குறை நோயால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் நாம் நினைப்பது போல் எய்ட்ஸ் ஒன்றும் எளிதில் பரவும் தொற்று நோய் இல்லை.

மாறாக பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தின் மூலம் மற்றும் தவறான பாலியல் தொடர்பு வாயிலாக அதிகளவில் பரவுகிறது.

இது நம்மிடம் உள்ள நோய் எதிர்க்கும் சக்தியினை முழுமையாக அழித்து ஒழிக்கிறது.இதன் மூலம் மற்ற சாதாரண நோய் உருவாக்கும் கிருமி கூட, நம் உடம்பிற்குள் எளிதில் நுழைந்து நோயினை உருவாக்குகிறது.

இவ்வாறு பல நோய்க்கிருமிகள் உருவாக்கும் நோய்கள் பல ஒருசேர, ஒருவர் உடம்பில் உருவாக வழி வகை செய்துவிடுகிறது.

நமக்கு சாதாரணமாக டைபாய்டு வந்தாலே நம்மலால தாங்க முடியல.. அதுவே டைபாய்டு உடன் மஞ்சள் காமாலை, காசநோய்,கொனேரியா என பல நோய்கள் ஒரு சேர ஒருவனுக்கு
வந்தால் நீங்களே யோசித்து கொள்ளுங்கள் என்ன நிகழும் என்று...

எப்படி என்றால்........?

உதாரணமாக நம் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களை கொன்று விட்டு, எதிரிகள் நம் நாட்டுக்குள் நுழைந்தால் என்ன நமக்கு நிகழுமோ, அது போன்ற நிகழ்வே எய்ட்ஸ்-யினால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடம்பிற்குள்ளும் நிகழும்.

அதாவது நம் உடம்பின் போர் வீரர்களாகிய ரத்த வெள்ளை அணுக்களை கொன்று,நம் உடம்பின்
நோய் எதிர்ப்பை குறைத்து,மற்ற நோய்க்கிருமிகள் அதாவது எதிரிகளை உடம்பினுள் உள்ளே செல்ல
அனுமதிக்கிறது எய்ட்ஸ் வைரஸ்கள்.

ஒழுக்க குறை உடையோருக்கு மட்டுமே வரும் என்று ஒரு சிலர் சொல்வார்கள்.
அது உண்மை தான்..மறுப்பதற்கில்லை. ஆனால் பிறந்த குழந்தைகள் கூட எய்ட்ஸ்-யினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.அதற்காக அவர்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்று நம்மால் சொல்ல முடியுமா....?

இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்று தான்...
அது என்னவென்றால் இந்த நோய்
நாம் தெரிந்தோ,தெரியாமலோ ரத்தம் வழியாக பரவுகிறது.

எச்சரிக்கை உணர்வோடு நம்மை நாமே
வருமுன் காத்தல் நன்று.

ஒருவேளை நமக்கு தெரிந்த அல்லது தெரியாத நண்பருக்கு எய்ட்ஸ் வந்து விட்டால் அவர்களை ஒதுக்கி தள்ளாது, அவர்களையும் மற்ற நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களை போல கண்காணிக்க வேண்டும்.

அவர்களை தொடுவதாலோ, அவர்களுடன் பேசுவதாலோ ஒரு போதும் நமக்கு அவர்களிடமிருந்து நோய் பரவப்போவதில்லை என்பதே உண்மை.

அவர்களும்
நம்மை போன்றவர்களே....
ஆதரிப்போம்...அரவணைப்போம்....
என டிசம்பர் முதல் நாளான இன்று நாம்
அனைவரும் உறுதி ஏற்போம்.

மெல்ல மெல்ல சாகடிக்கும் சாக்லேட் .........


இனிப்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது......அதுவும் சாக்லேட் என்றால் சொல்லவே தேவையில்லை.

நாம் மற்றும் நம் சின்னஞ்சிறு குழந்தைகள் அன்றாடம் விரும்பி சாப்பிடும் சாக்லேட்டுகளில், நம்மை சிறுகச்சிறுக கொல்லும் செயற்கை ரசாயனப்பொருள்கள் பல மறைந்து கிடக்கின்றன.அவை பற்றியும்,அதன் விளைவுகளை பற்றியும் தான் இந்த பதிவில் காண இருக்கிறோம்.

எந்த ஒரு உணவுப்பொருளிலும் ஒரு குறிப்பிட்ட அளவில்  மட்டுமே ரசாயனப்பொருள் அனுமதிக்கப்படுகிறது.
அந்த அளவினைத் தாண்டும் பொழுது
தான்,நம் உடல் படாத பாடுபடுகிறது.

உதாரணமாக சமீபத்தில் மேகி என்கிற நூடுல்ஸ் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக காரீயம் கொண்டிருந்ததால் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

நண்பர்களே......நாம் அனைவரும்
ஒன்றை மனதில் கொள்ள வேண்டும்.
காரீயம் என்பது நமது நரம்புகளுக்கு தீங்கானது.உடல் மந்தந்தை  உருவாக்க வல்லது.குறிப்பாக குழந்தைகளின் மூளை செயல்பாட்டை வெகுவாக பாதிக்கிறது.

பொதுவாக காரீயம் போன்ற ரசாயனங்களை பயன்படுத்துவதே தவறு.இதில் அளவுக்கு அதிகம் என்றால்.... நீங்களே யோசியுங்கள் விளைவுகள் எத்தகையதாய் இருக்குமென்று........?

சரி சாக்லெட்டில் தீங்கு செய்யும் ரசாயனப்பொருள்கள் என்னென்ன இருக்கு......?



காரீயம்
காட்மியம்
தியோப்ரோமைன்
ஹை பிரக்டோஸ் கார்ன் சிரப்
பாலிகிளிசெரால் பாலிரிஸினோலியேட்
சோயா லெசித்தின்
சிஸ்டெய்ன்
செயற்கை நிறமூட்டி
செயற்கை சுவையூட்டி
வனிலின்
பொட்டாசியம் சார்பேட்
கரகீனன்
ஆல்கலாய்டு
டெர்சரி பியூட்டில்ஹைட்ரொகுயினோன்

உடம்பிற்கு இவை தரும் தொந்தரவுகள்.......

உடல் எடை கூடுதல்
பசியின்மை
டிமென்ஷியா
இதய நோய்
சர்க்கரை நோய்
கேன்சர்
வயிற்றுப்பொருமல்
குமட்டல்
வாந்தி
வயிற்றுப்போக்கு
ஒவ்வாமை
தோலில் அரிப்பு
கிட்னி பாதிப்பு
கல்லீரல் பாதிப்பு
குடலில் வாயு உருவாதல்

'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதற்கு ஏற்றார் போல, மேற்கண்ட ரசாயனப்பொருள்கள் அளவுக்கு அதிகமாக அடங்கிய சாக்லேட்டுகளை தொடர்ந்து சாப்பிடும் பொழுது கடும் விளைவுகளை நம் உடல் சந்திக்க நேரிடும்.

ஆகவே முடிந்தவரை தொடர்ந்து சாக்லேட் சாப்பிடுவதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

பாருங்க மக்களே.......
இது போதாது என்று,போதை சாக்லெட்டுகள் வேற....

சமீபத்தில் கூட சென்னையில் போதை சாக்லெட்டுகள் விற்பதாக செய்தி வாயிலாக அறிந்தேன்.அதுவும் பள்ளிக்கூடங்கள் அருகில்.

நஞ்சு என்று தெரிந்தும், அதனை நாமே நாடிச் செல்லலாமா....... சிந்தியுங்கள்....



Tuesday 29 November 2016

மனதை விட்டு நீங்காத மகா-கலைஞன் என்எஸ்கே (NSK)



தமிழ் மக்களின் சிந்தனையை
தூண்டும் விதமாக பாடல்களையும், நகைச்சுவையையும் தமிழ் சினிமா மூலம் தந்தருளிய வள்ளல்,நம் மனதை விட்டு நீங்காத மகாகலைஞன் என்எஸ்கே (NSK) அவர்களை ஒரு நிமிடமாவது இன்று நினைவில் கொள்வோம்.

அர்த்தமுள்ள வரிகள்-29


பொய் ஒருபோதும் உன்னை வாழவிடாது.....அதுவே
உண்மை ஒருபோதும் உன்னை
சாகவிடாது.

அர்த்தமுள்ள வரிகள்-28


ஒவ்வொரு மனிதனும்,
தன் சொந்த காரியம் என்று
வரும்போது மட்டும்
கண் தெரியாத குருடர்களாக மாறிவிடுகிறார்கள்....

அர்த்தமுள்ள வரிகள்-27


எங்கே உங்கள் அன்பு குறைகிறதோ,
அங்கே உங்கள் கண்களுக்கு
தவறுகள் தான் மிகையாகத்தெரியும்.

அர்த்தமுள்ள வரிகள்-26


நீ நன்மை செய்யும்பொழுது
உலகம் ஒருபோதும் உன்னை உற்றுநோக்காது.அதுவே,
நீ தீமை செய்யும் பொழுது
அதே உலகம் உன்னை
விமர்சிக்காமல் இருக்காது....

அர்த்தமுள்ள வரிகள்-25


பேசிப்பயனில்லை என்கிற பொழுது மௌனம் தான் சிறந்தது;
பேசுவதிலேயே அர்த்தமில்லை
என்கிற பொழுது
பிரிவு தான் சிறந்தது.

Friday 25 November 2016

தமிழ் இனக்காவலனுக்கு பிறந்த நாள் இன்று.....


தமிழ் தேசிய தலைவன் மாவீரன் பிரபாகரன் பிறந்த நாள் இன்று
(november-26).1954 ஆம் ஆண்டு
இதே நாளில் தான் இலங்கையின் வல்வெட்டித்துறையில், திருவேங்கடம் வேலுப்பிள்ளை மற்றும் பார்வதி தம்பதிக்கு கடைசி மகனாய் தமிழ் இனம் காக்க பிறந்தார்.தமிழர்களாகிய நாம் அனைவரும் இன்று அவரது தியாகத்தை போற்றுவோம்.

பேசும் பாலாவின் கதாபாத்திரங்கள்- சூறாவளி


நாம் மறந்தவர்களை,நம் மண்டையில் கொட்டி அவ்வப்போது தன் சினிமா மூலம் அவர்களை நமக்கு நினைவுபடுத்துவதில் கில்லாடி என்றால் அது இயக்குனர் பாலாவிற்கு நிகர் வேறு யாருமில்லை.

நீங்கள் இயக்குனர் பாலா படங்களில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பெயர்களையும்,சற்று ஆழ்ந்து உற்றுநோக்கி பார்த்தீர்கள் என்றால், அந்த பெயர்களுக்கு சரியான காரண காரியங்களோடு பின்புலம் இருக்கும்.

மற்ற இயக்குனர்கள் போன்று பொத்தாம் பொதுவாக கதாபாத்திரங்களையும் சரி,அதன் பெயர்களையும் சரி இயக்குனர் பாலா அவர்கள் அவ்வளவு எளிதாக தெரிவு செய்வதில்லை.

அப்படி இயக்குனர் பாலாவினால் தெரிவு செய்யப்பட்ட பெண் கதாபாத்திரங்களில் மிகவும் அழுத்தமானது மட்டுமல்லாது,மிகவும் யதார்த்தமானது தான் இந்த சூறாவளி.

உண்மையில் எத்தனை பேருக்கு தாரை தப்பட்டையில் வரும் சூறாவளி (வரலட்சுமி) கதாபாத்திரம் பிடித்திருந்தது என்பது எனக்கு தெரியாது.

ஆனால் அந்த கதாபாத்திரம் போன்று ஆயிரமாயிரம் சூறாவளிகள் வாழ்ந்து மடிந்து இருக்கிறார்கள்.
இன்னும் வாழ்ந்து மடிந்து கொண்டு இருக்கிறார்கள்......

அவர்களில் ஒருத்தி தான் இந்த சூறாவளி.

நாம் நினைக்கலாம்........சூறாவளி
மாமனோட சேர்ந்து தண்ணி அடிக்கிறாள்,இவளை எப்படி ஒரு பெண்ணாக பாவிப்பது என்று...?

ஆனால் நிதர்சன உண்மை என்னவென்றால்,இரவு முழுக்க உடலை அசைத்து ஆடுவதால் வருகிற களைப்பிற்காக தான் அவர்கள் குடிக்கிறார்கள் என்று நம் எத்தனைக்கு பேருக்கு தெரியும்......?
பின் அந்த மதுவின் மூலம் சூறாவளி போல வாழ்க்கையை தொலைத்தவர்களும் பலர் உண்டு.

அந்த விபரீதத்தை இடைவேளைக்கு பின் ஒரு கவிழ்ந்து கிடக்கும் மது பாட்டிலை காண்பித்து நாசுக்காக சூறாவளியின் நிலைதனை அழகுற காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர் பாலா அவர்கள்.

ஆபாசம் அதிகமா இருக்கு என அனைவரது எண்ணமும் கூட.....

இந்த திரைப்படத்தை பொறுத்தவரை
ஆபாசம் இல்லை என்றால் தான் தவறு. அது ஏன் என்றால் தற்போதுள்ள கரகாட்டத்தை,இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வார்த்தைகள்  தவிர்த்து பார்க்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

அதையே,அதாவது இன்றைய கரகாட்டத்தை அப்படியே ஓரளவு
மறைக்காமல் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர்.

உண்மை ஒருபோதும் இனிப்பதில்லை....அது எப்போதும் கசக்கவே செய்யும்....என்ன செய்வது.

நீங்கள் கிராமப்பகுதியில் வாழ்ந்தவர்கள் என்றால் இவர்களைப்போன்ற ஆட்டக்காரிகளின் வாழ்க்கை பற்றி கொஞ்சமாவது தெரிந்திருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

இவர்களுக்கு இளையவர்களை விட வயதான பெரியவர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் கொடுக்கும் பாலியல் சீண்டல்கள் ஏராளம்.

வசதி படைத்தவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி தங்கள் வாழ்க்கையை தொலைத்த சூறாவளிகளும் உண்டு.

மாறாக படத்தில் வரும் சூறாவளியைப்
போன்று காதலிப்போரும் உண்டு.தன் காதலன் சொல்லுக்கு கட்டுப்பட்டு காதலை தங்கள் மனதில் புதைத்து
இன்னொருவனுக்கு வாக்கப்பட்டு
மண்ணில் மறைந்தோரும் உண்டு.

அதனைத்தான் இயக்குனர் வரலட்சுமி வாயிலாக தெளிவுற தன் திரைக்கதை மூலம் சூறாவளியை செதுக்கி இருப்பார்.

தங்கள் வயிற்றுப்பிழைப்பிற்காக அண்ணன்,தங்கை கூட ஆபாசமாக ஜோடி போட்டு பாடி ஆடுவார்கள்.இது நூற்றுக்கு நூறு உண்மை என எத்தனை பேருக்கு தெரியும்...?

நாம் அதனை சிறிது நேரம் ரசித்து விட்டு கடந்து சென்று விடுவோம்.இது தான் எதார்த்தம்.

அதனையும் இடைவேளைக்கு பின் அழகாக பாடல் மூலம் இயக்குனர்
காரணகாரியத்தோடு காட்சிப்படுத்தியிருப்பார்.

இது போன்ற ஆடல்,பாடல் காட்சிகள் இன்னும் கிராமப்பகுதியில் வயதான பெரியவர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.அவர்கள் ஆட்டக்காரிகளின் நெஞ்சில் ரூபாய் நோட்டை குத்துவதை நான் கண்கூட பார்த்திருக்கிறேன்.

பெரும்பாலும் ஆட்டக்காரிகளோடு நெருங்கி பேசிப்பார்த்தால் அவர்களிடம் முரட்டு ஆண் குணம் மிகுந்து இருக்கும்.அதற்காக அவர்கள் ஆண்களோ, மாற்றுப்பாலினத்தவரோ கிடையாது.உண்மையான பெண்கள் தான்.

அதற்கு காரணம்,பெரும்பாலும் அவர்களது பழக்கவழக்கம் ஆண்களை சுற்றியே இருக்கும்.காரணம் அவர்களது தொழில் அப்படி.மேலும் அதுவே தங்களை ஆண்களிடம் இருந்து பாதுகாக்கும் கவசம் கூட என்கிறார்கள் ஆட்டக்காரிகள்.

இது போன்ற முரட்டு ஆண் குணம் மிகுந்த சூறாவளியாக வரலட்சுமியை பயன்படுத்தியிருப்பார்.மேலும் அதனை சன்னாசி (சசிகுமார்) வார்த்தை மூலம் மறைமுகமாக சொல்லி இருப்பார் இயக்குனர் பாலா அவர்கள்.

வயிற்றுப்பிழைப்பிற்காக,சூறாவளி என்கிற பெண் எங்கோ நடு இரவில்,
நம் சமூகத்தில் இன்னும் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஆடிக்கொண்டு தான் இருக்கிறாள்.

அவர்களை தரிசிக்க நம் பெருசுகளும்,
காந்தி சிரிக்கிற ரூபாய் நோட்டுகளோடு இன்னும் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.....

பேசும் பாலாவின் கதாபாத்திரங்கள் - ஒட்டுப்பொறுக்கி

நிகழ் காலத்தில் ஒட்டுப்பொறுக்கி என்கிற இந்த சொலவடையை நீங்கள் கேட்டதுண்டா......?
அப்படி நீங்கள் கேட்டிருந்தாலும் மிக அரிதாகவே இருக்கும்.

சரி ஒட்டுப்பொறுக்கி என்றால் யார் ..?

வசதியில்லா அந்த காலத்தில் நம் மக்கள் தங்களது வீட்டில் நடக்கிற சுக துக்க நிகழ்வுகளை தகவலாக சொல்ல ஒரு சிலரை நியமித்திருப்பார்கள்.

அவன் தமுக்கு அடித்து ஊராருக்கு தகவல் சொல்லி அதனால் கிடைக்கிற தானியங்களை வைத்து தன் வயிற்று பிழைப்பினை நடத்துபவன்.

கிராமங்களில் தகவல் சொல்லிவிட்டு
தானியம் வாங்கி செல்பவரை,நான் என் சிறு பிராயத்தில் கண்கூட பார்த்ததுண்டு.

ஒரு சில கிராமப்பகுதியில் தங்கள் வீட்டு விசேஷத்திற்கு மொய் எழுதாதவர்களிடம் வசூல் செய்ய இவர்களை தகவல் சொல்ல பயன்படுத்திக்கொள்வதுண்டு.

இவர்களில் ஒருவனை மையப்படுத்தி பரதேசி என்கிற காவியத்தை படைத்திருப்பார் இயக்குனர் பாலா.

அப்படி ஒரு நபராக அதர்வாவை
அச்சு அசலாக பரதேசி படத்தில் ஒட்டுப்பொறுக்கியாக
செதுக்கி இருப்பார் இயக்குனர்.

இந்த  ஒட்டுப்பொறுக்கி இருக்கிற ஊர் பஞ்சத்தில் சிக்கி கொள்ளும் பொழுது, அவனது வாழ்வு எத்தகைய அபாய திசை நோக்கி செல்கிறது என்பதனை இயக்குனர் பாலா தனது அழகிய திரைக்கதை மூலம் நேர்த்தியாக சொல்லியிருப்பார்.

மேலும் பரதேசி மூலம் ஒரு ஒட்டுபொறுக்கியின் அப்பாவித்தனம்,
குடும்பம்,காதல் போன்றவற்றை சிறந்த இயல்பான கதை மூலமாக நம் கண் முன் அழகுற காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர்.

அந்தக்காலத்தில்....
எனக்கு விவரம் தெரிந்து,இந்த ஒட்டுப்பொறுக்கிகள் தகவல் சொல்வதற்கு தானமாக தானியம் மட்டுமல்ல,வீட்டில் எது கொடுத்தாலும் அது பலகாரமா இருக்கலாம்...இல்லை நம் பயன்படுத்திய துணிமணிகளாக இருக்கலாம்..... அவை எதுவாயிருப்பினும்,அதனை பெற அவர்கள் ஒருபோதும் கூச்சப்படுவதில்லை.

இன்றோ... அவர்களது வாரிசுகள் காசைத்தவிர வேறு எதனையும் பெறுவதில்லை.

இதையும் கூட எளிதில் நமக்கு புரியும் படியாக ஆரம்ப காட்சியிலும், கங்காணியை சந்திக்கும் முன் வரும் காட்சியிலும் நமக்கு தெளிவுபடுத்தி இருப்பார் இயக்குனர் பாலா.

இன்றும் நம்மோடு நவீன கால
ஒட்டுப்பொறுக்கிகள் வெவ்வேறு வடிவில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் தான் அவர்களை ஒருபோதும் பொருட்படுத்துவதேயில்லை.

Thursday 24 November 2016

கவலை வேண்டாம்-வாய் விட்டு சிரிக்கலாம்


ஜீவா மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்திருக்கும் கவலை வேண்டாம் என்கிற நகைச்சுவை திரைப்படத்தின் விமர்சனத்தை காண பின்வரும் வீடியோ லிங்கினை கிளிக் பண்ணுங்க....
http://viid.me/qqHlZQ

Wednesday 23 November 2016

மைக்ரோ-மர்மங்கள்(வினிகர்)-7


இன்றைய உலகில் சமையலில் அதிகம் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாது; சமயலறை,பாத்திரங்கள் மற்றும் வீட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் பொருள்.

இன்று நாம் பெரும்பாலும்
பயன்படுத்தும் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் ஊறுகாய் பொருள்கள்
அனைத்தும் இந்த பொருள் கலக்காமல் விற்கப்படுவதில்லை.

காரணம் இது சுவையூட்டி,கிருமிகளை அண்டவிடாது, முக்கியமாக நீண்ட நாட்கள் உணவுப்பொருளை கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக வைத்திருக்கும்.

தொண்ணூறு சதவீதம்(90%) அமெரிக்கர்களின் வீடுகளில் நீக்கமற நிறைந்திருக்கும் பொருள் வினிகர்
என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அந்த காலத்தில் நம்மூரில் இதனை
காடி என்பார்கள்.இப்பொழுது இந்த பெயர் தமிழ் சொல் வழக்கில் இருக்கிறதா......என்று எனக்கு தெரியவில்லை.(உங்கள் பகுதியில் இந்த சொல் வழக்கில் இருந்தால் தெரிவியுங்கள்)

என்னடா............பேரச்சொல்லாமல் பெருமை பேசுறானேனு நினைக்க வேணாம்..

இந்த பொருளின் அதாவது திரவத்தின்
பெயர் வினிகர்.

சரி நான் விசயத்திற்கு வருகிறேன்...

பொதுவாக இந்த வினிகர் நொதித்தல் முறையில் கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிரிகளால் உருவாக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா......?


புளிப்பு சுவையினை உடைய திரவமான வினிகரின் பெரும்பகுதி அசிட்டிக் ஆசிட் மற்றும் நீரினால் ஆனது.இந்த அசிட்டிக் அமிலமே உணவிற்கு சுவையும்,உணவு கெடாமல் பாதுகாப்பையும் அளிக்கிறது.

இந்த சிறப்புமிகு அமிலத்தை உருவாக்குவது அசிட்டோபாக்டர் அசிடி(Acetobacter aceti) என்கிற பாக்டீரியா.

இது உருளைக்கிழங்கு,ஆப்பிள் சிடர் திராட்சை போன்றவற்றில் உள்ள சர்க்கரை மூலக்கூறு எத்தனால் ஆகவும் ,அதுவே பின்னர் அசிட்டிக் அமிலமாக மாற்றுகிறது.இவை அனைத்தும் ஆக்சிஜன் அற்ற நிலையில் நிகழ்கிறது.

பின்னர் இது சுத்திகரிக்கப்பட்டு வெவ்வேறு நிலைகளில் பிரித்தெடுக்கப்பட்டு, சுத்தப்படுத்தியாகவும், உணவுப்பொருள்களில் துணை பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நம்மூரில் பெரும்பாலும் மேல்தட்டு வர்க்கத்தினர் தான் அதிகளவில் உணவுப்பொருள்களில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

கீழ்மட்ட அளவில் ஊறுகாய்களில் காலந்தொட்டு இதன் பெயர் வினிகர் எனத்தெரியாமலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது.


எது எப்படியோ....
இந்த சுவை மிகு உணவு பொருள் கெடாமல் பாதுகாக்கும் வினிகரின் உற்பத்திக்கு காரணம் நன்மை பயக்கும் பாக்டீரியா என இந்த பதிவு வாயிலாக அறிந்து கொண்டீர்கள்.

அடுத்த மைக்ரோ-மர்மங்கள் பகுதியில் இன்னொரு மர்மத்திற்கு விடை சொல்கிறேன்.

அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்.....

நம்மை சிரிக்க வைத்தவர்களை இப்படி அழவைக்கலாமா....?


ஒரு காலத்தில் நம் வயிறு நோக சிரிக்க வைத்த நகைச்சுவை நாயகர்கள் இவர்கள்.

தங்கள் கவலைகளை மறைத்து,நம் கவலைகளை மறக்க செய்தவர்கள், அன்று மட்டுமல்ல;இன்றும் தான்...

கதாநாயகர்களுக்காக படம் ஓடிய காலம் போய்,இவர்கள்
இருவருக்காகவே படம் ஓடிய காலங்கள் உண்டு.

குறிப்பாக தொண்ணூறுகளில் இவர்கள் இல்லாத தமிழ் சினிமாக்களை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.


இவர்கள் கால்ஷீட் வாங்கியவுடன் தான்
தங்களது படப்பிடிப்பை துவங்கிய தமிழ் பட இயக்குனர்கள் ஏராளம்.

நான் யாரை சொல்கிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

ஆமாங்க ....

நம் மனதை விட்டு நீங்காத
தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இரட்டை நகைச்சுவை நாயகர்கள்  கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகிய இருவரை பற்றித்தான் சொல்கிறேன்.


சமீப காலங்களில் இவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தவறாக பரப்பப்பட்டு வரும் வதந்திகள் உண்மையிலேயே வேதனை தருவதாக உள்ளது.

அவர்கள் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்ட பிறகும் இன்னும் வதந்திகள் தொடர்வது தான் வேதனையிலும் வேதனை.

பாருங்க...நேற்று கூட இப்படி தவறாக வெளியிடப்பட்ட வதந்திக்காக காவல் நிலையத்தில் திரு கவுண்டமணி சார்பில் புகார் கொடுக்கப்பட்டதாக செய்தி வந்துள்ளது.

அவர்கள் இறந்து விட்டார்கள் என்று அவ்வப்போது இடைவெளி விட்டு
வதந்தி பரப்பும் நண்பர்களே............

அப்படி என்ன அவர்கள் உங்களுக்கு தவறு செய்து விட்டார்கள்,அதையாவது சொல்லுங்கள்.

உங்களுக்கு உண்மையில் அவர்களது மேல் தனிப்பட்ட காழ்ப்புணர்வு இருப்பின், இவ்வாறு பொதுவெளியில் அவர்களை கொல்லாமல் கொல்வது எவ்விதத்தில் நியாயம்...

நீங்கள் காயப்படுத்துவது அவர்களை மட்டுமல்ல; என்னைப்போன்ற லட்சோப லட்சம் அவர்களது ரசிகர்களையும் தான் என்பதை தயவுகூர்ந்து மறக்காதீங்க...

அவர்கள் நம்மை சிரிக்க வைத்ததை தவிர்த்து வேறு என்ன நமக்கு செய்தார்கள்....?


அவர்கள்
நம்மை சிரிக்க வைத்த பாவத்திற்காக அவர்களை அழவைத்து வேடிக்கை பார்ப்பது நலமா.....

இனியாவது....
அவர்கள் வாழும் காலம் வரை நிம்மதியாக வாழ விடுங்களேன்..

சிந்தியுங்கள்.......
நாமும் வாழனும்,மற்றவரும் வாழனும்
சந்தோசமா மட்டுமல்ல ;
நிம்மதியாகவும்.

இயற்கை மருந்து-ஆடாதொடை


ஆடாதொடை (Justicia adhatoda)
என்கிற தாவரம் இயல்பாக ஈரப்பதம் குறைந்த மண்ணில் வளரக்கூடியது.
இது குறிப்பாக இந்தியா,மலேசியா, மியான்மர் போன்ற வெப்பமிகு நாடுகளில் அபரிமிதமாக காணப்படுகிறது.

இந்த செடியின் முழு உடல் பாகமும்,அதாவது தண்டு,இலை,கனி என அனைத்தும் மருத்துவ தன்மை மிக்கது.

இந்த செடி இயல்பாகவே கசப்புத்
தன்மை மிக்கது.ஆகவே பொதுவாக ஆடுகள் இந்த செடிகளை கடிக்காது.

இதன் காரணமாகவே நம் மூதாதையர்கள் இந்த செடியினை ஆடாதொடை (அதாவது ஆடு தொடா)
என தமிழில் அழைக்க தொடங்கினர்.
அதுவே இன்று இந்தச்செடியின்
நிரந்தர தமிழ் பெயராகவும் நிலைத்து நிற்கிறது.

Adhatoda vasica என்றும் பொதுவாக ஆங்கிலத்தில் அழைப்பதுண்டு.

அப்படி என்ன இந்த செடியில்
இருக்கு....?

குயினசொலைன்
வசிநோலோனே
வசிகோல்
பேகனின்
ப்ரோம்ஹெக்ஸின்
ஹைட்ராக்ஷி ஆக்க்ஷிசால்கோனே குளுகோஸில் ஆக்க்ஷிசால்கோனே
குயிரெட்டின்
கெம்ப்பெரோல்
ஆர்கானிக் அததொடிக் அமிலம்
பி-சிடோஸ்டெரால்-டி-குளுக்கோசைடு மைஒண்டோனே
வாசிசினோன்
வாசிசின்
அல்கலாய்ட்ஸ்
டிஆக்க்ஷிவாசிசின்
ஆக்ஸிவாசிசினினே

என்னடா வாயில் நுழையாத பெயர்களா இருக்கு.....
இதனால் நமக்கு என்ன பயன் எனத்தோணுதா....?

எத்தனை வித உடல் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறதென்று கொஞ்சம் கீழே பாருங்க.....

தொண்டைப்புண்
மஞ்சள் காமாலை
வலிப்பு நோய்
மலேரியா
வெண் நோய்
கொனேரியா
லெப்ரசி
வாந்தி
வயிற்றுப்போக்கு
வயிற்றுப்புண்
கண்ணில் ஏற்படும் புண்
ஆஸ்துமா
மூச்சுத்திணறல்
மூச்சுக்குழாய் அழற்சி
வயிற்றுக்கடுப்பு
சளி
இருமல்
கபம்
கீல்வாதம்
சிறுநீர்த்தொற்று
இரத்த அழுத்தம்
காசநோய்
காய்ச்சல்
சர்க்கரை நோய்
கல்லீரல் நோய்
ரத்தப்போக்கு
தோல் நோய்
நிமோனியா
டைபாய்டு
வலி
வீக்கம்
தசை இழுப்பு
அலர்ஜி

எல்லாம் சரி....கசப்பாக இருக்குமே...
எப்படி சாப்பிடுறது...?

நீங்கள் ஆடாதொடை செடியின்
இலையை தண்ணீரில் வேகவைத்து அதனை பின்னர் இருத்து கஷாயமாக, அதாவது கடுங்காப்பி போல் கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து பருகலாம்.
இல்லையென்றால் தேன் சேர்த்து பருகலாம்.

இலையை நன்றாக பசை போல அரைத்து பாதிக்கப்பட்ட தோலில் அதனை மருந்தாக போடலாம்.

யார் இதனை சாப்பிடுவதை தவிர்க்கணும்...?

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள்..
மற்றபடி யார் வேண்டுமானாலும் தவிர்க்காமல் சாப்பிட்டு மேல் குறிப்பிட்ட உடல் ரீதியான பிரச்சனைகளில் இருந்து
விடுதலை பெறலாம்.

கசப்பு என ஒதுக்கி விடாதீர்......

சரி நண்பர்களே........இன்றைய
பதிவில் ஆடாதொடை செடி பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

அடுத்த இயற்கை மருந்து பகுதியில் வேறொரு செடியின் மருத்துவ
பண்பை சொல்கிறேன்.

அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்...

Monday 21 November 2016

கடைக்காரர் இல்லாத கடைகள் (இதுவும் நம் இந்தியாவில் தான்)


என்னடா தலைப்பே புதுசாவும், வியப்பாகவும் இருக்கிறதா...?

அதுவும் இந்தியாவில்,
கடைக்காரர் இல்லாத கடைகளா...?
சாத்தியமே இல்லை என சத்தியம் செய்வோர் உண்டு.

ஆனால் நம் நாட்டில் விவசாயிகள்
சாத்தியமாக்கி காட்டி இருக்கிறார்கள்.

அது எங்கே,எப்படி என்று
இப்பதிவில் காண்போம்...

மிசோரம் என்கிற மாநிலம் இந்தியாவில் இருக்கிறது என்று நம் எத்தனை பேருக்கு தெரியும்....?

சரி....ஒருவேளை உங்களுக்கு தெரியலைனா வாங்க இனியாவது
தெரிஞ்சுக்குவோம்.....

சுமார் பத்தில் இருந்து பதினொன்று லட்சத்திற்குள் மக்கள் தொகை கொண்ட மிகச்சிறிய வடகிழக்கு மாநிலம்.மியான்மர்,பங்களாதேஷ் நாடுகளை எல்லையாக கொண்டது.
இங்கு அதிகபட்ச மக்கள் கிறித்துவ மதத்தை பின்பற்றுகின்றனர்.
இந்த மாநிலத்தின் பெயரான மிசோரம் என்றால் 'மலை வாழ் மக்களின் நிலம்' என பொருள்படும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்,
முழுக்க முழுக்க மலை சூழ்ந்த பசுமைமிக்க அழகிய மாநிலம்.


நாம் எங்கெங்கோ சுற்றுலா செல்கிறோம்.இது போன்ற சகோதர மாநிலங்களுக்கு சென்றதில்லை. அவர்களும் நம் மாநிலங்களுக்கு பெரிதாக வந்து செல்வதில்லை (இன்று சென்னை போன்ற பெருநகரங்களில் வயிற்று பிழைப்பிற்காக மட்டும் வரும் வடகிழக்கு முகங்களை காண முடிகிறது).

காரணம் போக்குவரத்து பிரச்சனையே.....

இதனை இந்திய சரி செய்து, நம் கவனம் பெறாத இது போன்ற மாநிலத்தின் பெருமையை இந்தியர்கள் அனைவருக்குமாவது தெரியப்படுத்தலாமே....

பெரும்பான்மையான இந்தியர்களின் கவனம் பெறாத வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இங்கு தான் சர்வசாதாரணமாக மனிதன் இல்லாத கடைகள் மலிந்து காணப்படுகிறது.


இங்கு வாழும் கிராம விவசாயிகளின் எண்ணத்தில் உதித்தவையே, இதுபோன்ற கடைக்காரர் இல்லா கடைகள்.

பார்த்துக்கோங்க மக்களே.....!
அவர்களது எண்ணம் எவ்வளவு
பெரிது என்று....

நம்மூரில் இது போன்ற கடைகள் சாத்தியமா....?
அதுவும் சாலை ஓரங்களில் (எனக்கு தெரிந்து இதுபோன்ற கடைகள்
எங்கள் பகுதியில் இதுவரை இல்லை;
ஒருவேளை உங்கள் ஊரில் இதுபோன்ற கடைகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்).

சரி விசயத்திற்கு வருகிறேன்...
மிசோரம் தலைநகரமான ஐஸ்வால்லில் இருந்து சரியாக அறுபத்தி ஐந்து(65km) கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஸெலிங் (seling).அந்த மலைகள் நிறைந்த நெடுஞ்சாலை பகுதியில் தான் இது போன்ற கடைக்காரர் இல்லா கடைகள் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக தென்படுகிறது.

இந்த கடைகளை அம்மாநில மக்கள்
nghah lou dawr (shops without shopkeepers) என்று அழைக்கிறார்கள்.

கடைகள் எப்படி இருக்கு....?


சாலை ஓரங்களில் திறந்த வெளியில்
மூங்கில் கம்புகள் நட்டு,சிறிய தட்டி வேய்ந்த கிடுகை அவ்வளவுதான்...

அங்கு விற்பனைக்குரிய பொருள்கள் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும்
(பொருள்கள் யாவும் அந்த பகுதியில் விளைபவை மற்றும் கிடைப்பவை).

மேலும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பொருளின் விலையும் அட்டையில் எழுதி தொங்க விடப்பட்டிருக்கும்.

பணம் செலுத்துவதற்கு என்று ஒரு பாட்டில் தொங்கவிடப்பட்டிருக்கும்.

என்னென்ன  பொருள்கள் இங்கு கிடைக்கின்றது.....?

காய்கறிகள்
பழங்கள்
உப்புக்கருவாடு
பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறு

யார் இங்கு வாங்குகிறார்கள்.....?

நெடுஞ்சாலைகளில் பயணிப்போர் தங்கள் விருப்பமான பொருள் விற்பனைக்கு இருந்தால்,அதனை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை பாட்டிலில் போடுகிறார்கள்.

மீதி சில்லறையை இருந்தால் எடுத்துக்கொள்கிறார்கள்...இல்லை என்றால் அடுத்த நாள் வந்து எடுத்து செல்கிறார்கள்.


ஒருசிலர் சில்லறையை எடுக்க வருவதில்லை;ஆனாலும் ஒருபோதும் பொருளுக்குரிய காசு இல்லாமல் இருந்ததில்லை,அதைவிட அதிகமாகவே இருக்கும் என்று சொல்கிறார்கள் அந்த பகுதியில் இதுபோன்ற கடை வைத்திருக்கும் விவசாயிகள்.

கொஞ்சம் யோசித்து பாருங்க நண்பர்களே.....இதுபோன்ற கடைகள்
நம் மாநிலத்தில் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்...?

நேர்மை,நம்பிக்கை அவர்களிடம் மூலதனமாக இருக்கிறது.அது நாம் அனைவரிடமும் இருந்தால் இதுபோன்ற கடைக்காரர் இல்லாத கடைகள் நம் பகுதியிலும் சாத்தியமே..

அத்தகையதொரு நாளுக்காக காத்திருப்போம்..............

Sunday 20 November 2016

பார்வைகள் பலவிதம்-எழுத்தாளர் ஜெயமோகனின் கருப்பு பண ஒழிப்பு பற்றிய சாட்டையடி பதிவு.....


மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை பற்றி பல விமர்சன கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன.ஆனால்
எழுத்தாளர் ஜெயமோகனின் கருப்பு பண ஒழிப்பு சம்பந்தமான பார்வை வேறுவிதமாக இருக்கிறது.அவர் வெளியிட்ட முழுக்கட்டுரையை  அப்படியே இந்த பதிவில் வெளியிடுகிறேன்.

நரேந்திர மோடி வென்று வந்தபின்னர் நான் எப்போதும் மெல்லிய ஐயத்துடனேயே அவரை அணுகிவந்தேன். அவரை எவ்வகையிலும் ஆதரிக்கவில்லை. அவருடைய அரசியல் எழுச்சியின்போதே அந்த ஐயம் நீடித்தது. அவர் பதவிக்கு வந்தால் அவருக்கு எதிரான மனநிலையை தக்கவைக்கவேண்டும் என்று அப்போதே முடிவுசெய்து அதை அன்றே இந்தத்தளத்தில் எழுதவும் செய்திருந்தேன்.

ஏனென்றால் அமைப்பு என்பதன் எடை என்ன என்று எனக்குத்தெரியும். எளிதில் அதை மாற்றமுடியாது. காரணம் அது மெல்லமெல்ல காலப்போக்கில் உருவாகிவந்த ஒன்று. பொருளியல், கருத்தியல், சமூக அமைப்புக்கள் அனைத்தும் அப்படித்தான். ஆகவே அமைப்பை மாற்றுவது சார்ந்த அவருடைய ஆவேசக்கூச்சல்களை ஓர் எளிய அரசியல் உத்தி என்பதற்கு அப்பால் நோக்கத் தோன்றவில்லை.

அதேபோல எனக்கு எப்போதுமே வலதுசாரி , மதவாத அடிப்படைவாதிகளைப்பற்றிய ஐயம் உண்டு. அவர்கள் இந்தியாவில் பல்லாயிரமாண்டு காலமாக இருந்துவரும் நிலைச்சக்தியின் இன்றைய வடிவம். ஒரு தொன்மையான பண்பாடு, சமூகம் அப்படித்தான் இருக்கமுடியும். அது மாற்றங்களை மறுக்கும் மனநிலை கொண்டிருப்பது இயல்பே

அந்தத்தரப்பினரின் மூர்க்கமான சமத்துவ மறுப்பு, நவீனத்துவ எதிர்ப்பு மேல் எப்போதும் எனக்குக் கடும் விமர்சனங்கள் உண்டு. இந்தத் தளத்தில் பத்தாண்டுகளாக அவர்களை எதிர்த்து நான் எழுதிய நூற்றுக்கும் மேலான கட்டுரைகள் உள்ளன. அவர்கள் மோடியின் பின்னால் அணிதிரளக்கூடும் என்ற ஐயம் இருந்தது. ஆகவே பொதுவாக ஒரு விலக்கத்துடன் மட்டுமே மோடியின் அரசியல் எழுச்சியை பார்த்தேன். அதற்கு எதிரான அனைத்து சக்திகளுக்கும் என் அனுதாபமும் இருந்தது

அத்துடன் மோடி எதிர்பாளர்கள் மேல் எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அவர்கள் இந்தியாவில் முற்போக்கான மாற்றங்களை உருவாக்கிய ஐரோப்பியமயமாதல் மற்றும் இடதுசாரி கருத்தியல்களின் நீட்சி என்றும் அவர்களுக்கு இந்தியக்கட்டுமானத்தில் முக்கியமான பங்குண்டு என்றும் நம்பினேன். இன்றும் அந்நம்பிக்கை நீடிக்கிறது. அந்த உணர்வுடன் எவர் எழுந்துவந்தாலும் என் ஆதரவு உண்டு.

என் நம்பிக்கை சற்று ஆட்டம் கண்டது அவர்கள் முன்னெடுத்த ‘சகிப்பின்மை பிரச்சாரத்தின்’ போது. எவருக்காவது நினைவிருக்கிறதா? அந்தப்பிரச்சாரம் ஊடகங்களில் மூன்றுமாதம் நீடித்தது. அரசை எதிர்க்காத அத்தனை கலைஞர்களும் எழுத்தாளர்களும் வசைபாடப்பட்டனர். ஆனால் அந்தப்பிரச்சாரத்தை முன்னெடுத்த அறிவுஜீவிகள் அரசிடமிருந்து பெற்று, பெரும்பாலும் சட்டவிரோதமாக அனுபவிக்கும் சலுகைகளைப்பற்றிய பேச்சு எழுந்ததுமே அப்படியே அந்தப்பிரச்சாரம் நமுத்து மறைந்தது

இது இன்னொரு தருணம். நான் இன்னமும் நம்பும் முற்போக்குச் சக்திகள் மேல் கொண்ட பெரும் ஏமாற்றத்தை பதிவுசெய்ய விரும்புகிறேன். இன்னமும் பெரிய ஏமாற்றம். வரலாற்றின் இத்தருணத்தில் இப்படி நடந்துகொண்ட குறுகியபுத்திக்காக அவர்களில் சிலராவது நாளை வருந்துவார்கள். இன்று என்னை முத்திரைகுத்துவார்கள். செய்யட்டும்.


இதோ கள்ளப்பணத்தின் ஆற்றலை நாம் கண்டுகொண்டிருக்கிறோம். அது ஊடகங்களை ஒட்டுமொத்தமாக விலைக்கு எடுக்க முடியும் என்றும், அரசியல் கட்சிகள் அதன் சேவகர்கள் மட்டுமே என்றும் உணர்கிறோம். அனைத்தையும் விட மேலாக அறிவுஜீவிகளை சல்லிவிலைக்கு அது வாங்கி அடியாட்களாக வைக்கும் என்றும் சமகாலம் நமக்குக் காட்டுகிறது.

இந்திய வரலாற்றில் எப்போதும் அறியப்பட்ட அரசியல்கட்சித்தலைவர்கள் கள்ளப்பணத்திற்கு ஆதரவாக இப்படி வெளிப்படையாகக் களமிறங்கியதில்லை. இப்படி அதை ஆதரித்து இத்தனை பொருளியலாளர்கள் பேசியதில்லை. அறிவுஜீவிகள் அதன்பொருட்டு கண்ணீர்மல்கியதில்லை. இடதுசாரிகள் கள்ளப்பணத்தைக் காப்பதற்காக பிரச்சார மோசடிகளில் ஈடுபடும் ஒரு காலத்தை நாம் கண்ணெதிரில் கண்டுகொண்டிருக்கிறோம்

அதிகம்போனால் ஆறுமாதம், இந்தப்பிரச்சாரம் இன்றைய அனலை இழந்து வரலாறாக ஆகும். அப்போது இவர்கள் கள்ளப்பணத்திற்கு ஆதரவாகக் குரலெழுப்பினார்கள் என்பதை நாம் நினைவுகூர்ந்து நாணுவோம். நான் இந்தக்கட்டுரையை அன்று மறுபிரசுரம் செய்வேன், இது என்றென்றும் நம் முன் ஒரு கறையாக நின்றுகொண்டிருக்கும்

கருணாநிதி கள்ளப்பணத்தைக் காக்க போராட்டம் அறிவிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அகிலேஷ் யாதவ் அதைப்பாராட்டுவதை புரிந்துகொள்ளமுடிகிறது.  சீதாராம் எச்சூரியும் ,பிரகாஷ் காரத்தும் கொந்தளிப்பதைப் புரிந்துகொள்ள நாம் இதுவரை அறிந்த வரலாற்றுணர்வு நமக்குப் போதாமலாகிவிட்டிருக்கிறது.

ஏன் இந்த நடவடிக்கை?

மிக எளிமையான இந்தியக்குடிமகனுக்கும் புரியகூடிய ஒன்று இத்தகைய ஒரு கடுமையான நடவடிக்கையை எடுக்க அரசு உத்தேசிக்கிறது என்றால் அதற்குரிய பெரும்பொருளியல் நெருக்கடியை இந்தியா எதிர்கொண்டிருக்கிறது என்பதே. சென்ற பல ஆண்டுகளாகவே கருப்புப்பணப் பொருளியல்தான் மைய ஓட்டப் பொருளியலை விட பெரிதாக வளர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. உலகில் மிக அதிகமாக கறுப்புப்பணம் கொண்ட ஐந்தாவது பொருளியல் இந்தியாவுடையது.

அதற்குக் காரணம் நம் வரிவிதிப்பு முறையில் உள்ள சிக்கல்கள். நம் பொருளியலில் வங்கிவழிப் பணப்பரிமாற்றம் மிகமிகக் குறைவு. பெரும்பாலும் காகிதப்பணப் பரிமாற்றம். அதில் ஊழல் நடந்தால் அதிகாரிகள் நேரடியாக அதைப் பிடிக்கவேண்டும், தண்டிக்கவேண்டும். ஆனால் அதிகாரிகளும் ஊழல் செய்தால் ஒன்றுமே செய்யமுடியாது. நம் சமூக அமைப்பே ஊழலுக்கு ஆதரவான மனநிலைகொண்டது. ஆக, கள்ளப்பணம் அரசின் பிழையால் உருவாகி நீடிப்பது அல்ல. நம் பொருளியல் ஒழுக்கமின்மையின் விளைவு அது.

இதை அறியாத அப்பாவிகள் எவரேனும் இந்தியாவில் செய்தித்தாள் படிக்கும் நிலையில் இருக்கிறார்களா என்பதே சந்தேகம். எங்கும் ரசீதே இல்லாத வணிகம் நிகழ்வதை நாம் அறிவோம். நாம் பெறும் ரசீதுகளேகூட பொய்யானவை . ஒவ்வொருநாளும் நாம் ஈடுபடும் வாங்கல் விற்கல் அனைத்தும் கள்ளப்பணத்திலேயே. ஆனால் கள்ளப்பணம் ‘அங்கே’ எங்கோ இருக்கிறது என நம்ப ஆசைப்படுவோம். நாமும் நம்மைச்சூழ்ந்தவர்களும் பச்சைக்குழந்தைகள் என வாதிடுவோம்.

இந்தக்கள்ளப்பணப் பொருளியல் நெடுங்காலம் வளரமுடியாது. ஏனென்றால் ஆக்கபூர்வமான பொருளியலில் லாபம் என்பது மீண்டும் முதலீடாக ஆகவேண்டும். கள்ளப்பணத்தில் அப்படி ஆவது கடினம். அந்த லாபம் வட்டிக்கு சுற்றிவரும். நிலத்தில் அல்லது பொன்னில் போட்டு வைக்கப்படும். அவை தேங்கும் செல்வம் மட்டுமே. முதலீடு அல்ல.

சென்ற பத்தாண்டுகளாக கள்ளப்பண முதலீட்டிலிருந்து வந்த லாபமே மறைமுக வட்டித்தொழிலாக, ‘ரியல் எஸ்டேட்’ முதலீடாக வீக்கம் கண்டது. இங்கே நகர்ப்புற நிலமும் சொத்தும் சற்றும் பொருத்தமற்ற வளர்ச்சியை அடைந்தமைக்குக் காரணம் கள்ளப்பணம்தான்

ஆனால் வட்டி, நிலம் இரண்டு தளங்களிலும் சென்ற ஐந்தாண்டுகளில் பெரும் நெருக்கடி வந்தது. இன்று மேலே சொன்ன இரு தொழில்களையும் வன்முறை இன்றி , அரசியல் இன்றி செய்யமுடியாது என்பதே உண்மைநிலை. மிகப்பெரிய நிழல் உலகம் ஒன்று அதைச்சார்ந்து உருவாகிவந்துள்ளது. ஆகவே அது அனைவருக்கும் உரியதாக இன்று இல்லை.

பொன் சென்ற பத்தாண்டுகளில் நாணயமாகச் சேமிக்க உகந்தது அல்ல என்றாகிவிட்டிருக்கிறது. தங்கம் கொண்டுபோகவும் வரவும் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் அதை விற்குமிடத்தில் உள்ள சட்டக்கெடுபிடிகள்  காரணமாக அதை புழங்கும் பணமாக கருதமுடியாது.

இந்நிலையில் பெரும்பாலான கள்ளப்பணம் நோட்டுகளாகவே பதுக்கப்படலாயிற்று. அது ஆபத்தற்றது, வெளியே தெரியாதது. எப்போதுவேண்டுமென்றாலும் வெளியே எடுத்து புழக்கத்திற்கு விடப்படவேண்டியது.

நோட்டுக்களில் மிகப்பெரும்பகுதி இப்படித் தேங்கும் சூழல் என்பது பொருளியலுக்கு மிகப்பெரிய அடி. முதலீட்டுத்தேக்கம் உருவாகி தொழில்வளர்ச்சி மூச்சுத்திணறுகிறது. சென்ற இரண்டாண்டுகளாக மிக முக்கியமான தொழிலதிபர்கள் பலர் இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்கள் என்னிடம். நான்கு வெவ்வேறு பொருளியல்நிபுணர்களிடம் பேசியிருக்கிறேன்.

இரண்டாவது, அனைவரும் அறிந்தது. கள்ளநோட்டு. ஐ.கே.குஜ்ரால் காலகட்டத்தில் நோட்டுக்கு காகிதம் வாங்குவதில் செய்யப்பட்ட ஒரு பெரும்பிழை பத்தாண்டுக்காலம் நீடித்தது. பாகிஸ்தான் , சீனா போன்ற அரசுகளே கள்ளநோட்டுக்களை இந்தியப்பொருளியலில் இறக்கியபோது நம் அமைப்பால் ஒன்றும் செய்யமுடியவில்லை

மூன்றாவதாக, ஹவாலா. இந்தியாவின் மிகப்பெரும் செல்வம் மானுட உழைப்பு. முதன்மையாக நாம் ஏற்றுமதிசெய்வதே கைகளையும் மூளையையும்தான். அந்தப்பணம் எங்கும் பதிவாகாமல் வரிகட்டப்படாமல் இங்கே வரும்போது நம் பொருளியல் பெரும் இழப்பை சந்திக்கிறது.

இம்மூன்றையும் கட்டுப்படுத்தாமல் ஓர் அடிகூட முன்னால் வைக்கமுடியாது என்னும் நிலை வந்து ஐந்தாண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் மன்மோகன்சிங்கின் பலவீனமான அரசு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கமுடியவில்லை. நானறிந்து, மூன்றுமுறை நடவடிக்கைகளுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரைத்தது. அவை கிடப்பில் போடப்பட்டன, அரசியல் கட்டாயம்.

இந்நடவடிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்ட ஒன்று என்பதை எவரும் உணரமுடியும். ஜன்தன்போன்ற திட்டங்கள் வழியாக  இந்தியாவில் ஏறத்தாழ அனைவருக்குமே கட்டாயமாக வங்கிக்கணக்கும், ஏடிஎம் அட்டையும் வழங்கப்படத் தொடங்கி ஓராண்டாகிறது. அப்போது ‘சோறில்லாதவர்களுக்கு வங்கிக்கணக்கா?’ என நம் அறிவுஜீவுகள் கிண்டலடித்தனர். அவர்களே இன்று ‘ஏழைக்கு வங்கிக்கணக்கு ஏது?’ என பாட்டுபாடுகிறார்கள்.

அதேபோல வரும் ஏப்ரல் முதல் ஜிஎஸ்டி அமலாகிறது. இந்தியாவின் தொழில் –வணிகத்தை அறிந்தவர்களுக்குத் தெரியும் , வரிகட்டும் வழக்கமே இல்லாதவர்கள் நம் வணிகர்கள் மற்றும் சிறுதொழிலதிபர்கள். வரி ஏய்ப்புக்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அவர்களைத் தூண்டி பங்குபெற்றுவருகிறார்கள். ஜிஎஸ்டி அவர்களுக்கு மிகப்பெரிய கட்டாயத்தை அளிக்கிறது. வரிகுறித்த அனைத்துக் கணக்குகளும் ஓரிடத்தில் குவிகின்றன. ஆகவே நூறுடன் இரும்பு வாங்கி ஆயிரம் கிரைண்டர் செய்ததாக கணக்கு காட்டி விற்பனைவரியை ஏமாற்றமுடியாது

உண்மையில் இன்று தொழிலதிபர்களே ஜிஎஸ்டியை ஆதரிக்கிறார்கள். அவர்கள் வளர்த்துவிட்ட பூதம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். ஆனால் இன்று அவர்கள் வரிகட்டுவதைவிட பலமடங்கு பணத்தை இவர்களுக்குக் கப்பமாகக் கட்டநேர்கிறது. ஜிஎஸ்டி வந்து அரசுவரிவிதிப்பு முறை இயல்பாகவே நடக்குமென்றால் அவர்களுக்கு உண்மையில் லாபம்தான். இழப்பு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும்தான்

இந்த நாணய ஒழிப்பு ஜிஎஸ்டிக்கு முன்னோடியாக வங்கிப்பொருளியலை நோக்கி வணிகத்தைக் கொண்டுசெல்வதற்காகவே முதன்மையாக உத்தேசிக்கப்பட்டது என்பது பொருளியலறிந்த எவருக்கும் தெரியும்.ஆனால் ஒரு நாளிதழிலாவது ஒரு கட்டுரையாவது அதைக்குறிப்பிடுகிறதா என்று பார்த்தேன். ஏமாற்றம்தான். இங்கே கள்ளப்பணத்திற்கு ஆதரவாகவே அனைத்துக்குரல்களும் எழுந்துள்ளன இன்று.

இந்த நடவடிக்கை என்னென்ன செய்யக்கூடும்?

1. வங்கிசார்ந்த பொருளியலை நோக்கி நம் வணிக உலகை உந்தும். முழுமையாக அது நிகழமுடியாது. ஏனென்றால் இவ்வமைப்பு மிகமிகப்பெரியது. 20 சதவீதம் நிகழ்ந்தாலே அது மிகப்பெரிய லாபம்.

2. நோட்டுக்களாகவே தேங்கிய பணம் எவ்வகையிலேனும் புழக்கத்திற்கு வரக்கூடும். அது பொருளியலுக்கு நல்லது.

3. கள்ளநோட்டுக்களில் கணிசமான பகுதி இல்லாமலாகும். மீண்டும் அவை வர சில ஆண்டுகளாகும். அதுவரை பொருளாதாரம் தாக்குப்பிடிக்கமுடியும்

4. வரிகொடுக்கப்படாத கள்ளப்பணத்தில் 20 சதவீதமாவது வரிகொடுக்கப்பட்ட பணமாக ஆகலாம். அதுவே இன்றைய சூழலில் மிகப்பெரிய வெற்றி.

ஆகவே மிகமிக முற்போக்கான, மிக இன்றியமையாத ஒரு நடவடிக்கை இது. இடதுசாரி அரசுகளே இத்தகைய நடவடிக்கைகளைச் செய்யத் துணியும். அதை ஓர் வலதுசாரி அரசு செய்திருப்பது ஆச்சரியம். அதை இடதுசாரிகள் தெருவுக்கு வந்து எதிர்ப்பது பேராச்சரியம்.

வரிகட்டுவோருக்கு ஆதரவான நடவடிக்கை..

ஏன் கள்ளப்பணம் ஒழியவேண்டும்? இப்போது சிலர் ‘அது நல்லதுதான் சார், இருந்துட்டுப்போகட்டும்’ என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இன்றுவரை நம் வரிவிதிப்புமுறை எப்படிப்பட்டது? யார் வரிகட்டுகிறார்களோ அவர்களுக்கே மேலும் வரி என்பதுதானே? மாதச்சம்பளக்காரர்கள், நுகர்வோர் இரு சாராரும் கட்டும் வரியில்தான் நாடே ஓடிக்கொண்டிருக்கிறது. நம் அரசுகள் அவர்கள் மேலேயே மேலும் வரிகளைச் சுமத்திக்கொண்டிருந்தன. அதன் உச்ச எல்லையையும் அடைந்துவிட்டிருக்கிறோம்.

நீங்கள் மாதச்சம்பளக்காரர் என்றால் உங்கள் அலுவலகத்திற்கு முன்னால் உள்ள ஓட்டலுக்குச் சென்று அவர் என்ன வரி செலுத்துகிறார் என்று கேட்டுப்பாருங்கள். நீங்கள் ஒருமாதம் வாங்கும் சம்பளம் அவரது ஒரு நாள் வருமானம். அது நிலமாக, நகையாக, ரொக்கப்பதுக்கலாக ஆகிக்கொண்டே இருக்கும். வரி கட்டும் வழக்கமே அவருக்கிருக்காது.

இந்தியாவின் குறுவியாபாரிகள், தொழில் தரகர்கள், சேவைப்பணியாளர்கள், வட்டித்தொழில் செய்ப்பவர்கள்உண்மையில் வரி கட்டும் வழக்கமே இல்லாதவர்கள். யார் சொத்துக்களை வாங்குகிறார்கள் என்று பாருங்கள், பெரும்பாலும் இவர்கள்தான். இவர்களின் வருமானம் சேமிப்பு  இரண்டுமே முழுக்க முழுக்க நோட்டுகளிலேயே நடப்பதனால் அதை கண்காணிப்பதும் பிடிப்பதும் அனேகமாகச் சாத்தியம் இல்லை. . வருமானவரியாவது ஒன்றாவது.

இந்தியாவில் விற்பனைவரி நுகர்வோரிடம் பிடித்தம்செய்யப்படுகிறது. அதை அரசுக்குக் கட்டும் வணிகர்களும் உற்பத்தியாளர்களும் ஐந்து சதவீதம்பேர்கூட இல்லை. அனைத்து ஆவணங்களும் பொய். அனைத்து ரசீதுகளும் பொய். காவலனே கள்வனாகும்போது அரசு ஒன்றுமே செய்யமுடியாது.

அவர்கள்தான் இங்கே இந்நடவடிக்கையால் முதன்மையாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே அவர்கள்தான் கூச்சலிட்டு பிரச்சினை செய்கிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். கலவரம் வரவேண்டுமென அறைகூவுகிறார்கள். அதை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறார்கள். வருந்தத்தக்க உண்மை என்னவென்றால் அவர்களுக்காகவே ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் பேசுகிறார்கள்.
ஆனால் ‘எளிய மக்கள்’ ஒருநாளுக்கு 2000 ரூபாய்தானே எடுக்கமுடியும் என கண்ணீர்விடுகிறார்கள். சமகால அறிவுலகின் ஆகப்பெரிய கேவலம் என இந்த நீலிக்கண்ணீரைத்தான் நான் காண்கிறேன்.

நடந்துகொண்டிருப்பது என்ன?

என்ன நடந்துகொண்டிருக்கிறது என நீங்கள் இன்று கண்கூடாகவே காணலாம், எத்தனை கோடிரூபாய் நேரடியாகக் கணக்குக்குள் வந்துகொண்டிருக்கிறது என்று எண்ணவே ஆச்சரியமாக இருக்கிறது. கள்ளப்பணம் வைத்திருப்பவர்கள் பணத்தை தங்கள் ஊழியர்கள், உறவினர்கள் கணக்கில் வரவு வைக்கிறார்கள். 8 சதவீதம் டிடிஎஸ் ஆக வருமானவரிக்குச் செல்லும். 10 சதவீதம் அவர்களுக்கு ஊதியம். மிச்சப்பணத்தை கேட்கும்போது திருப்பித்தரவேண்டும்.எங்கும் இதுதான்பேச்சு

அரசு இந்த மோசடிக்கு எதிராக எச்சரிக்கை விடுத்தாலும் பேரார்வத்துடன் மக்கள் அதற்கு முண்டியடிக்கிறார்கள். வங்கியில் போட்ட பணத்தில் இருந்து செல்லும் நோட்டாக எடுத்துக்கொடுத்தால் 30 சதவீதம் கமிஷன்  என்கிறார்கள் நாகர்கோயிலில். நாற்பது என்கிறார்கள் கோவையில். எத்தனை பெரிய பொருளியல் அசைவு இது. ஆனால் ஊடகங்கள் ஏடிஎம் வரிசையை மட்டுமே முன்வைக்கின்றன.

கண்கூடாகவே கோடிக்கணக்கில் ரூபாய் வெளியே வந்துகொண்டிருக்கிறது. ஆம்,இதுவும் ஒரு மோசடி. ஆனால் எப்படியோ வரி என ஒன்று கட்டப்படுகிறது. வங்கிவணிகம் கட்டாயமாக ஆவதனாலேயே அரசுக்கு வரும் வரி இன்னொரு பாதை. நண்பர்களே, இதெல்லாம் நாளை சட்டப்படி வரிகட்டிவரும்  நம் மீது வரியாக ஏற்றப்படவிருந்த தொகை.

வரிகட்டுபவன் வரிகட்டாமல் தன் சுமையை அதிகரிக்க வைப்பவனைப் பார்த்து பரிதாபப்படவேண்டும் என நம் ஊடகங்கள் எதிர்பார்க்கின்றன.  ‘அய்யோ பாவம், ஏடிஎம் வாசலில் நிற்கும் நிலை உனக்கு வந்துவிட்டதே’ என இவர்கள் நம்மிடம் சொல்கிறார்கள். இவர்களுக்கிருக்கும் கருணைதான் என்ன!

இன்று இந்தத் திட்டத்தை வசைபாடுபவர்கள் மூன்று சாரார். கள்ளப்பணம் வைத்திருப்பவர்கள் வசைபாடுவது இயல்பு. இன்னொருசாரார் வெறும் மோடி எதிர்ப்பாளர்கள். அது ஒரு மனநோயாகவே ஆகிவிட்டிருக்கிறது இன்று. மூன்றாமவர் வரிசையில் இரண்டுநாள் நிற்கநேர்ந்தமையாலேயே சலித்துக்கொள்ளும் நடுத்தரவர்க்கக்காரர். ஊடகம் உருவாக்கும் மாயையை நம்பும் அப்பாவிகள்

இந்தக் கடைசிநபரிடம்
கேட்கப்படவேண்டிய கேள்வி ஒன்றே. ஐம்பதாண்டுகளாக வரிகட்டாமல் இயங்கிவரும் இந்தப்பெருச்சாளி உலகைக் கலைத்து அவர்களில் ஒருசாராரையாவது வரிகட்டக் கட்டாயப்படுத்தும் அரசு செய்வது தவறா? வரிக்குச் சிக்குபவர் என்பதனாலேயே மேலும் மேலும் உங்கள்மேல் வரிபோடவா நீங்கள் சொல்கிறீர்கள்?

இதைச்சொன்னதும்  உடனே எழும் பொதுக்கேள்விகள் சில உண்டு..

1. மோடி வெளிநாட்டில் இருக்கும் கருப்புப்பணத்தை மீட்டுக்கொண்டுவருவதாகத்தானே சொன்னார்? அது என்னாயிற்று? இதை ஏன் சொல்லவே இல்லை?

கருப்புப்பணத்தை மீட்டுக்கொண்டுவரும் தன் நோக்கத்தை சொல்லி அவர் பதவிக்கு வந்தார். அதைச் செய்கிறார். இங்கிருக்கும் மாபெரும் கருப்புப் பொருளியலை ஒழிப்பேன் என்று சொல்லியிருந்தால் அவர் பதவிக்கே வந்திருக்கமுடியாது. இன்று பதவிக்கு வந்தபின்னரேகூட  கருப்புப்பணத்தால் அனைத்து ஊடகங்களையும் விலைக்கு வாங்கி இவ்வளவுபெரிய பொய்யான சித்திரத்தை உருக்கமுடிகிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும். அவரை அரசியலில் இருந்தே ஒழிக்குமளவுக்கு வெறுப்பு பொங்கிவழிகிறது இங்கே.

வெளிநாட்டுக் கருப்புப்பணம் என்பது உள்ளூர் கருப்புப்பணத்தின் மிகச்சிறுபகுதி என எவருக்கும் தெரியும். மேலும் அது ஹவாலாமூலம் திரும்பி வந்து இங்குள்ள கருப்பு பொருளியலில்தான் கலந்துகொண்டுள்ளது. அது பதுக்கல், இது சமாந்தரப் பொருளியல் . அது குற்றம், இது அழிவு நடவடிக்கை. அவசியமாகச் சீர் செய்தாகவேண்டியது இதுதான்

வெளிநாட்டுக் கள்ளப்பணத்தைப்பற்றி மட்டும் பேச ஏன் விழைகிறோம்? அது ‘அங்கே’ எங்கோ இருக்கிறது. நம்மைச்சுற்றி உள்ள கருப்புப்பணம் பெரிய பிரச்சினை அல்ல என்று நாம் நம்மை சமாதானம் செய்துகொள்ள உதவுகிறது

வெளிநாட்டுக் கருப்புப்பணத்தை மீட்பதென்பது நூற்றுக்கணக்கான சர்வதேசச் சட்டங்களுக்குள் செல்லும் சிக்கலான நடவடிக்கை. அதைச்செய்தபின்னர்தான் இங்கே கையை வைக்கவேண்டும், அதுவரை இதை விட்டுவைக்கவேண்டும் என கூவுகிறீர்கள் என்றால் நீங்கள் யார்? உங்கள் நோக்கம் என்ன?

2 . போதிய முன்னேற்பாடுகள் எடுக்காமல் அமலாக்கம் செய்யப்பட்ட இந்நடவடிக்கைகளால் பொதுமக்களுக்குப் பாதிப்பு வருகிறதே. இது அரசின் தோல்வி அல்லவா?

போதிய முன்னேற்பாடுகள் என்றால் என்ன? அனைத்து வங்கிகளிலும் நோட்டுக்கட்டுகளை முன்னரே கொண்டுவந்து குவிப்பதா? ஏடிஎம் இயந்திரங்களின் ஐநூறு ஆயிரம் ரூபாய்களுக்கான தட்டுகளை அகற்றிவிட்டு மாற்றி அமைப்பதா? அவற்றைச் செய்தபின் இந்நடவடிக்கையைச் செய்தால் என்ன பயன்? இதைப்பேசுபவர்களுக்கு மண்டைக்குள் உண்மையில் என்னதான் இருக்கிறது? கொழுப்பா களிமண்ணா?

முன்னேற்பாடுகள் ஓராண்டுக்கு முன்னரே நிகழ்ந்துள்ளன என்பதை அரசு சென்ற ஓராண்டுக்காலத்தில் ஏழைமக்களுக்கு அமைத்துக்கொடுத்த கட்டாய இலவச வங்கிக்கணக்குகளே காட்டும்

இந்தியாபோன்ற மிகச்சிக்கலான, மிகமிகப்பிரம்மாண்டமான ஒரு பொருளியலில் மிக அதிரடியான ஒரு நடவடிக்கையை அறிவித்தது அரசு. இந்தியா மாபெரும் நிலப்பரப்பும் மக்கள்தொகையும் கொண்டநாடு. எங்கும் எதிலும் இங்கே வரிசை இல்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. ஒருநாளில் இரண்டு வரிசையிலாவது நிற்பவர்கள் நாம்.  இங்குள்ள நிர்வாக அமைப்பு மிகப்பழைமையானது. இருந்தும் என்ன நடந்துவிட்டது?

அதிகபட்சம் ஒருவாரம் ஒரு பதற்றமும் குழ்ப்பமும் நிலவியது. இன்று ஊடகங்களை மறந்துவிட்டு உங்கள் சூழலைப்பார்த்தால் எந்தப்பதற்றமும் இருப்பதைப்பார்க்கமாட்டீர்கள். நடவடிக்கை ஆரம்பித்தநாள் நான் மும்பையில் இருந்தேன். மறுநாளே 2000 ரூபாய் ஏடிஎம்மில் எடுத்தேன். 45 நிமிடமாயிற்று. இன்று மீண்டும் 2500 எடுத்தேன். இன்று எட்டுபேர் இருந்தனர் வரிசையில். ஐந்து நிமிடம் ஆகியது. என் செலவு அவ்வளவுதான்.

திருவனந்தபுரம், சென்னை என தொடர்ந்து ஏடிஎம் களை பார்க்கிறேன். எங்கும் அதிகபட்சம் ஒருமணிநேரத்திற்குள் பணம் எடுக்கமுடிந்தது சென்றவாரம். இன்று சற்றுமுன் சென்னை சூளைமேட்டில் என் மகன் பணம் எடுத்தான். எவ்வளவு நேரமாகியது என்றேன். நான்குபேர் இருந்தோம் என்றான்.

ஆம், இது ஒரு நிலைகுலைவை உருவாக்கவே செய்யும். அதை எண்ணித்தான் இதை ஆரம்பித்திருப்பார்கள். உங்கள் நகரில் ஒரு சந்தையை இடமாற்றம் செய்தாலே சிலநாட்கள் குழப்பம் நிலவுகிறது. சில அழிவுகள் உருவாகின்றன. இந்த மாபெரும் பொருளியல் நடவடிக்கை எளிதாக முடிந்துவிடாது.

அதற்கு எதிர்ச்சக்திகள் மிகப்பெரியவை. அவர்கள் சமாந்தர அரசு போல. அவர்களில் தானைத்தலைவர்கள் முதல் சாதித்தலைவர்கள் வரை உண்டு. ஆகவே எளிதில் முடிவது அல்ல இது. அப்படிப்பார்த்தால் உருவாகியிருக்கும் நெருக்கடி மிகமிகச்சிறியது. இத்தனை எளிதாக இது முடியுமென்றுதான் அரசினரே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அப்படியென்றால் வதந்திகளை எவர் உருவாக்குகிறார்கள்? ஏன் அவற்றை இவ்வளவு வெறியுடன் பரப்புகிறார்க்கள்? ஊடகங்களின் உண்மையான நோக்கம் என்ன? ஸ்க்ரோல் என்னும் இணைய மஞ்சள்பத்திரிகையில் ஒரு கட்டுரை. மக்கள் கூட்டம்கூட்டமாக ஏடிஎம் முன்னால் சாகிறார்கள், மாபெரும் கலவரம் வெடிக்கப்போகிறது என்று. என்னதான் உத்தேசிக்கிறார்கள்?

ஒரு பொருளியல் நடவடிக்கையை அரசு எடுக்கிறது. அது தவறானது என்று சொல்பவர்கள் எவருமில்லை – வெளிப்படையாகக் கள்ளப்பணத்தை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் ஆதரிக்க ஆரம்பித்தது கொஞ்சம் பிந்தித்தான்.ஆனால் மொத்த ஊடகங்களும் ஒட்டுமொத்தமாக இணைந்து முழுப்பலத்தையும் பயன்படுத்தி அந்நடவடிக்கையை தோற்கடிக்க முயல்வது ஏன்?

இணையமும் சமூகவலைத்தளங்களும் ஊடகங்களும் வதந்திகள் மூலம் பீதிகளைப் பரப்பியமையால்தான் இங்கே நடந்த சிறிய குளறுபடிகள்கூட நிகழ்ந்தன. இல்லையேல் மிகச்சுமுகமாக முடிந்திருக்கும் அனைத்தும்.

3 ஊடகங்கள் மக்களின் கஷ்டங்களைச் சொல்லக்கூடாதா? மக்கள் அவதிப்பட்டது பொய்யா?

இதுவரை வந்த ‘அழிவுகள்’ என்ன? வரிசையில் சிலர் மயங்கி விழுந்தார்களாம். நாற்பதுபேர் செத்துப்போனார்கள் என்றுகணக்கு. அவர்களின் உடல்நிலை என்ன, அவர்கள் எங்கே ஏன் இறந்தார்கள் எதுவும் தெரியாது. இந்தக்காலகட்டத்தில் இந்தியாவில் தெருவில் எவர் இறந்தாலும் அது மோடி செய்த கொலை. தேசம் முழுக்க கிட்டத்தட்ட ஒருகோடிபேராவது ஏடிஎம்மில் நின்றிருப்பார்கள். அவர்களில் ஒருவருக்கு மாரடைப்பு வந்தால்கூட அது அரசுப்படுகொலை!

உத்தரப்பிரதேசத்தில் ஓர் ரேஷன்கடை ஊழியர் நான்குமாதமாக கடைதிறக்கவில்லை. மக்கள் கடையைச் சூறையாடினர். அது ஏடிஎம்மில் பணமில்லாததனால் நடந்தது என நூறு நாளிதழ்கள் செய்திவெளியிட்டன. இருபது டிவிக்கள் எரியும்செய்தியாக அதை வெளியிட்டன. உண்மைச்செய்தி வெளியானபின்னரும் அவை அபப்டியே தொடர்ந்தன.

ஓர் ஆஸ்பத்திரியில் பழையநோட்டை எடுக்கமுடியாமல் குழந்தை இறந்ததாம். மோடி கொலைகாரா என கண்ணீர்க்குரல். முதலில் அந்த ஆஸ்பத்திரிமேல் அல்லவா நடவடிக்கை எடுக்கவேண்டும்? அங்கே அக்குழந்தைக்கு உதவாதவர்கள் அல்லவா பழிசுமக்கவேண்டும்?

இதையெல்லாம் பேசுபவர்கள் யார்? அறிவிக்கப்படாத வேலைநிறுத்தங்களை தொடங்கி நாட்டை பலமுறை ஸ்தம்பிக்க வைத்தவர்கள். ஒரு மாநாடு என்றாலே நகரங்களை உறைய வைப்பவர்கள். இவர்களின் ஒரு மாநில மாநாட்டில்கூட இதைவிட அதிகமாக மக்களுக்கு இன்னல் நிகழ்ந்திருக்கும்.

ஆம் ,மக்கள் ஓரளவு அவதிப்பட்டனர். இத்தகைய நடவடிக்கை முதலில் ஒரு அச்சத்தை உருவாக்கும். அதன்விளைவாக ஏடிஎம்களில், வங்கிகளில் குவிந்தனர். அது இந்தியா போன்ற மக்கள்தொகைமிக்க நாட்டில் தவிர்க்கவே முடியாதது. ஒரு சேலைவினியோகம் நடந்தால் மிதிபட்டு மக்கள் சாகும் நாடு இது.

அத்துடன் மக்களை தங்கள் கருவிகளாகப் பயன்படுத்தி கருப்புப்பணத்தை நோட்டுகளாக ஆக்க களமிறங்கினர் வணிகர்கள். அதன்விளைவே நெரிசல் நீடித்தது. மக்களின் அவதியை பற்றிப்பேசிய எந்த ஊடகமும் இந்த உண்மையைச் சொல்லவில்லை.

மக்கள்மேல் அக்கறை இருந்தால் உண்மையைச் சொல்லியிருக்கவேண்டும். எங்குமே பணமில்லை என்னும் பீதியைக் கிளப்பியிருக்கக்கூடாது. மேலும் பலவாரங்களுக்குப் பணமில்லாமலாகும் என்னும் ஊகத்தைக்கூட பொய்யாகப் பரப்பின நம் செய்தியூடகங்கள்.

ஒரு வயதான பாட்டி இரு ஐநூறு ரூபாய்களை வைத்துக்கொண்டு அவை செல்லாமலாகிவிட்டன என அழுகிறாள். அதை படம்பிடித்து ‘ஏழைகள் மேல் மோடியின் போர்’ என ஒரு இணையப்பிரச்சாரம் நடந்தது. ஒரு தபால்நிலையத்திற்குச் சென்று ஒருமணிநேரத்தில் அதை நூறுரூபாயாக ஆக்கியிருக்கலாம், ஒருவாரம் பொறுத்தால் பத்துநிமிடம்தான் ஆகும் அதற்கு என அந்தப்பாட்டிக்குச் சொல்லவில்லை எவரும். மாறாக அதை கிட்டத்தட்ட முப்பதுலட்சம் பேர் பகிர்ந்துகொண்டனர்.

இத்தனையையும் மீறி வெறும் ஒருவாரத்தில் எங்கும் நிலைமை சீரடைகிறது. ஆனால் ஊடகங்களுக்கு போதவில்லை. நிலைமை கட்டுமீறுகிறது என ஓலமிடுகின்றன. சமஸ்  தி ஹிந்து நாளிதழில் ‘மாபெரும் பொருளியல் அழிவை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது’ என்கிறார். அதாவது கறுப்புப்பணம்தான் பொருளியலாம்.

ஆறுமாதம் கழித்து இக்கட்டுரையைப்பற்றி அவரிடம் ஒரு விளக்கம் கோர இங்கு எவருமிருக்கப்போவதில்லை. அக்கட்டுரையின் நோக்கமே ஆறுவாரமாவது  அது பொருள்படவேண்டும் என்பது அல்ல. இன்றைய சூட்டில் முடிந்தவரை பீதியைக்கிளப்பவேண்டும் என்பதே. அது அந்நாளிதழின் அரசியல், அவ்வளவுதான்.

4 இதனால் கறுப்புப்பணம் ஒழிந்துவிடுமா?

முற்றிலும் ஒழியாமல் போகவும்கூடும். அதனால் நடவடிக்கையே தேவையில்லை என்று வாதிடுகிறீர்களா? கருப்புப்பொருளியலை நிலைநிறுத்துபவர்கள் இந்தியமக்களில் ஒரு பெரிய அளவினர். அவர்களுக்கு எதிரானது இந்த நடவடிக்கை.

அவர்களுக்கும் ஆற்றல் உண்டு. அவர்களுக்காகப்பேச எத்தனை அரசியல்வாதிகள், எத்தனை ஊடகங்கள், எவ்வளவு அறிவுஜீவிகள் என்று பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள் இதைக் கடந்துசெல்லும் வழிகளைக் கண்டடையலாம். நம் மக்கள் அதற்கு முழுமையாக ஒத்துழைப்பார்கள், கொஞ்சம் லாபம் வந்தால்.

ஆனால் ஒரு பத்துசதவீத அளவுக்கு கருப்புப்பணம் ஒழிந்தால், தேங்கிய நோட்டுகளில் இருபதுசதவீதம் புழக்கத்துக்கு வந்தால், கள்ளநோட்டு முக்கால்பங்காவது ஒழிந்தால் நாம் பொருளாதாரத்தில் ஒரு படி முன்னெடுத்து வைப்போம்

அது நடக்கக்கூடாதென விரும்புபவர்களின் கூச்சல்களே இன்று ஓங்கி ஒலிக்கின்றன.

5 .பெருமுதலைகளை விட்டுவிட்டு சிறுவணிகர்களைப் பிடிக்கிறதே அரசு, இது பிழை அல்லவா?

இது எப்போதும் நிகழும் ஒரு பெரிய மோசடிவாதம். கோடானுகோடிக் கணக்கில் வரிஏய்ப்புசெய்யும் கோடிக்கணக்கானவர்கள் மேல் ஒரு சிறுநடவடிக்கை வருகிறது. அதற்கும் மேலே சிலரைச் சுட்டிக்காட்டி முதலில் அவர்களைப்பிடி எனச்சொல்லி வாதிட்டு இவர்களை நியாயப்படுத்துகிறார்கள். இந்த வாதத்தின் நோக்கம் கள்ளப்பணத்தை ஆதரிப்பது மட்டுமே, வேறேதுமல்ல.

இது முதலாளித்துவப் பொருளியல். இங்கே இடதுசாரிகள் பெருமுதலாளிகள் மற்றும் தனியார் உற்பத்தித்துறைக்கு எதிராகப் பேசுவது புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால் பிற அனைத்திலும் முதலாளித்துவத்தை ஆதரித்து, அதன் வசதிகளில் திளைத்துக்கொண்டிருப்பவர்கள் தங்களுக்கு ஒரு கட்டாயம் வரும்போது இடதுசாரிகள்போல பெருமுதலாளிகளை வசைபாடுவது மோசடித்தனம்.

முதலாளித்துவப் பொருளியல் அமைப்பில் உற்பத்தி, சேவைத்துறைகளில் பெருமுதலாளிகளின் முதலீடும் பங்களிப்பும் மிகமிக முக்கியமானவை. அவற்றை காப்பாற்றவே எந்த ஒரு முதலாளித்துவ அரசும் முயலும். ஏனென்றால் அவை பெருமுதலாளிகளால் நிர்வகிக்கப்பட்டாலும் தேசத்தின் கூட்டான செல்வம். அவர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல

வங்கிகள் வீழ்ச்சி அடைந்தபோது அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்காக தனியார் வங்கிகளுக்கு சும்மா அளித்து அவற்றை காப்பாற்றியது. ஏனென்றால் வங்கிகளே அமெரிக்கப் பொருளியலின் அடிப்படை. அவை நலியவிடமுடியாது.

அடிப்படை உற்பத்தித் துறைகளில் உள்ள பெருமுதலாளிகளை அரசு ஏதோ ஒருவகையில் காப்பாற்றித்தான் ஆகவேண்டும். இல்லையேல் தேசப்பொருளியல் அழியும். சில பிராண்டுகள் நவீன தேசிய முதலாளித்துவப் பொருளியலின் அடிப்படைகள். ஃபோர்டை அமெரிக்காவோ டொயோட்டாவை ஜப்பானோ அழியவிடாது. டாட்டாவையோ அசோக் லேலண்டையோ மகிந்திராவையோ அழியவிட்டால் இந்தியா அழியும்.

சிலதுறைகளில் அரசு சில முன்னெடுப்புகளை நடத்தும்.இந்தியா நவீனப்பொருளியலுக்குள் வருவதற்கு போக்குவரத்து,செய்தித்தொடர்பு ஆகிய இரண்டு தளங்களிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்தே ஆகவேண்டும் என்னும் நிலை ஏற்பட்டது. அதை இந்திய அரசு திட்டமிட்டு உருவாக்கியது..

1989ல் என் மாதச்சம்பளம் 1700 ரூபாய். திருவனந்தபுரம் முதல் சென்னைவரை விமானப்பயணக் கட்டணம் 14000 ரூபாய். கிட்டத்த எட்டு மடங்கு அதிகம். இன்று என் பதவியில் இருப்பவர் வாங்கும் சம்பளம் 60000. இன்று அதே விமானக்கட்டணம் சாதாரணமாக 4000 ரூபாய். பன்னிரண்டு மடங்கு குறைவு.

1988ல் நாகர்கோயிலில் இருந்த் டெல்லிக்கு போன்பேச மூன்று நிமிடத்துக்கு 45 ரூபாய். இன்றைய கணக்கில் 1500 ரூபாய் இருக்கவேண்டும். இன்று 3 ரூபாய். ஐநூறுமடங்கு மலிவு.

இந்த வசதிகளின் விளைவாகவே இந்தியப் பொருளியலில் மாற்றம் ஏற்பட்டது. அதன் விளைவுகளையே நாம் அனுபவிக்கிறோம். எண்பதுகளில் ஒவ்வொரு இளைஞனும் வாழ்க்கையில் குறைந்தது ஐந்தாண்டுக்காலத்தை வேலையில்லாமல் கழித்திருப்பான். அந்நிலை மாறியது.இன்று அடித்தள மக்களின் வாழ்க்கையில்கூட உணவுப்பஞ்சம் இல்லை.எண்பதுகளில் மூன்றுவேளை உணவென்பதே ஒரு பெரும் சொகுசு.

எண்பதுகளில் தமிழகத்தில்  ஒரு கிராமத்தில் ஒருவீடு மட்டுமே குடிசையல்லாமல் இருக்கும். இன்று தமிழகத்தில் குடிசைகள் அபூர்வமாகிவருகின்றன. ஆம்,நாம் செல்லவேண்டிய தூரம் அதிகம்ந். ஆனால் நெடுந்தொலைவு வந்துள்ளோம் என்பதே உண்மை

எண்பதுகளில் இந்திய அரசின் ஏர் இந்தியாவும் இண்டியன் ஏர்லைன்ஸும் மட்டும்தான். விமானங்கள் வருமென்பதற்கே உத்தரவாதம் இல்லை. ஆகவே எந்த விமானமும் பாதிப்பங்கு கூட நிறைந்திருக்காது. இந்நிலை மாறவேண்டுமென அரசு எடுத்த முயற்சியின் விளைவே தனியார் விமானத்துறை. ஏனென்றால் விமானத்துறை முன்னேறாமல் நவீனத் தொழில்துறை முன்னேற்றம் இல்லை.

இந்திய அரசு அளித்த சலுகைகள் ,ஊக்கங்கள் ,மறைமுகக் கட்டாயங்கள் ஆகியவற்றால் உருவான பல விமானநிறுவனங்களில் ஒன்றுதான் கிங்ஃபிஷர். மதுத்தயாரிப்பாளரான விஜய் மல்லய்யாவின் நிறுவனம் அது. 2003ல் ஆரம்பிக்கப்பட்ட அந்நிறுவனத்திற்கு இந்திய வங்கிகள் பெருமளவு நிதி அளித்தன. கடனாகவும் மறைமுக முதலீட்டாகவும்.

அவ்வாறு நிதியளிப்பது இந்திய அரசின் பொருளியல் வளர்ச்சி சார்ந்த கொள்கை.ஏனென்றால் இந்திய அரசு விமானத்துறை வளரவேண்டுமென்று விரும்பியது. நிதி நிறைய உள்ளே வந்தமையால் சட்டென்று ஒருவளர்ச்சி ஏற்பட்டது. பத்தாண்டுகளுக்கு முன் விமானக்கட்டணங்கள் முதல்வகுப்பு ரயில்கட்டணங்களைவிடக் குறைவாக ஆயின.

ஆனால் அது ஒரு வீக்கம். விரைவிலேயே பல விமானநிறுவனங்கள் நஷ்டங்களைச் சந்திக்கலாயின. அதற்கான காரணங்களை எளிதில் வரையறுக்க முடியாது. வியாபாரத்தில் எந்தமேதையும் தவறான கணிப்புகளை போட்டுவிடக்கூடும். எல்லா கணிப்புகளும் சரியாக இருந்தும் வியாபாரம் சரியக்கூடும். கிங்ஃபிஷர் வீழ்ச்சியடைந்தமைக்குக் காரணம் பெங்களூரின் வளர்ச்சியை மிகையாக மதிப்பிட்டதுதான், அதைநம்பி அதிகமான விமானங்களை விட்டார்கள் என்று அறிந்தேன். இருக்கலாம்

விஜய் மல்லய்யாவின் வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகளே காரணம் என்றார் ஓரு தொழிலதிபர். அவர் பெங்களூர் பெரிதாக வளரும் என கணக்கிட்டார். ஆனால் உள்கட்டமைப்புவசதிகளே செய்யாமல் பெங்களூரை தேங்கவிட்டனர் அரசியல்வாதிகள். அவர்கள் எல்லாம் யோக்கியர்கள், விஜய் மல்லய்யா திருடன் – இதுதான் நம் மனநிலை.

கிங்ஃபிஷர் நஷ்டம் அடைந்தது.
விஜய் மல்லய்யா தலைமை வகித்த பொதுப்பங்கு நிறுவனம் அது. அதன் லாபத்தில் பெரும்பகுதி
அவருக்குத்தான் சென்றிருக்கும் என்பதனால் நஷ்டத்துக்கும் அவர் பொறுப்புதான். ஆனால் அவர் இந்திய அரசை ஏமாற்றி மோசடி செய்து தப்பி ஓடிய அயோக்கியன் என ஊடகங்கள் காட்டுவதும், இந்திய அரசு அவருக்கு பணத்தைச் சும்மா அள்ளிக்கொடுத்தது என்று சொல்வதும் மூடத்தனத்தின் உச்சம்.

ஒருவகையில் விஜய் மல்லய்யாவுக்கு நிதி அளித்த நம் அரசும் வங்கிகளும் அவரது தொழில்பங்காளிகள். ஆகவே நஷ்டங்களை அவர்கள் பகிர்ந்துகொள்வதே முறை. அது அரசு வங்கிப்பணத்தை தனியொருவருக்குச் சும்மா அள்ளிக்கொடுப்பது அல்ல. அது ஒரு பிழையாகிப்போன முதலீடு. உலகம் முழுக்க எந்த வங்கியும் அத்தகைய முதலீடுகளைச் செய்துகொண்டுதான் இருக்கும். பிழையாக ஆவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

அமெரிக்கா,ஜப்பான்,சிங்கப்பூர் போன்ற அதிநவீன நாடுகளில் கூட
இது மீண்டும் மீண்டும் நடக்கிறது. அதை பொருளியல்நோக்கில் விவாதிப்பது வேறு விஷயம். அதில் ஓர் இடதுசாரி நோக்குடன் கருத்துச்சொல்வது வேறு. ஆனால் அதை ஒரு ஊழல் அல்லது திருட்டு என்று முதலாளித்துவ ஆதரவு இதழ்களும் அரசியல்வாதிகளும் குற்றம்சாட்டுவது குறைவாகச் சொன்னால்கூட ஒர் அவதூறு, ஒரு குற்றம்.

இன்று நம் அரசும் வங்கிகளும் ஆற்றல் உற்பத்தித்துறையில் முதலீடு செய்ய தனியார்த்துறையை ஊக்குவிக்கின்றன. கடன் அளிக்கின்றன. அதில் பெரிய அளவிலான வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. இந்தியப்பொருளியலின் ஆதாரமாக அது மாறிவருகிறது. மோடி அரசின் சாதனையாக அது சொல்லப்படுகிறது

ஆனால் அந்த தொழிலதிபர்களில் ஒருசிலர் தோல்வியடையக்கூடும். வாய்ப்புகளை கணிப்பதில் உள்ள பிழையால். அல்லது கண்ணுக்கே தெரியாத காரணங்களால். அதில் அரசுக்கு இழப்பும் ஏற்படக்கூடும். லாபம் ஏற்பட்டால் பேசமாட்டோம், இழப்பு ஏற்பட்டால் அதை கொள்ளை என்று சொல்வோம் என்பது அல்ல பொருளியல் புரிதல்.

இதையெல்லாம் கொஞ்சம் விளக்கமாக எழுத நம் ஊடகங்கள் முயலலாம். ஆனால் ஆச்சரியமாக எதையுமே அறியாத வெறும் இதழாளர்களே ஊடகங்களில் எழுதிக்கொண்டிருக்கின்றனர். வெறும் கிராமத்து மேடைப்பேச்சுத் தரத்திலேயே நம் கட்டுரைகள் அமைந்துள்ளன. நம் சூழலின் துரதிருஷ்டம் இது.

விஜய் மல்லய்யாவை விட்டுவிடவேண்டும் என்று சொல்லவில்லை. அவரை வங்கிகள் வரவழைக்கலாம். சாத்தியமான அளவுக்கு அவரிடமிருந்து பணத்தை மீட்கலாம். ஆனால் அவர் மோசடியாளர் அல்ல. அவர் தோற்றுப்போன தொழில்முனைவர். அவரை மோசடியாளராக வேட்டையாடும் ஓர் அரசு அதற்குப்பின் தொழில் முனைவோரை தன் இலக்குக்கு இழுக்கவே முடியாது.

இந்தியாவின் தனியார்த்துறையில் அரசு முதலீடு பெருமளவுக்கு உள்ளது. முதலாளித்துவப்பொருளியலில் அதுவே இயல்பு. அதில் லாபம் இருப்பதனால்தான் நாம் வாழ்கிறோம். நஷ்டமும் இருக்கும். நஷ்டங்களை அரசு முதலாளிகளுக்கு ஏழைகளின் பணத்தைச் சும்மா கொடுக்கிறது என்று சித்தரிப்பது அப்பட்டமான மோசடி.

அதை ஒர் இடதுசாரி தீவிர இதழ் சொன்னால் புரிந்துகொள்ளலாம், அது அவர்களின் அரசியல். ஆனால் ஒரு பொருளியல் நடவடிக்கையின்போது கருப்புப்பணத்தை ஒழிப்பு நடவடிக்கையில் இருந்து வரிகட்டாதவர்களை தப்பவைக்கும்பொருட்டு மல்லய்யா போன்ற தொழிலதிபர்களை திருடர்களாக ஆக்கி சித்தரிப்பது என்பது ஊடகக் கீழ்மை.

உற்பத்தி,உட்கட்டமைப்பு,அடிப்படைச்சேவைத் துறைகளில் பங்களிப்பாற்றும் பெருநிறுவனங்களுக்கும் சிறுவணிகர்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடுண்டு.
அப்பெருநிறுவனங்களின் பெரும் முயற்சிகள் தோற்றுப்போகக்கூடும். அந்நஷ்டத்தில் அரசு பங்குசேரக்கூடும். சமீபமாக டாட்டா நிறுவனம் பெரும் கனவுத்திட்டம் ஒன்றின் தோல்வியால் துவண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அரசு உதவக்கூடும். அது வரிப்பணத்தைக் கொடுப்பது அல்ல. டாட்டா நம் பொருளியலின் அடித்தளங்களில் ஒன்று

அதைச்சுட்டிக்காட்டி நாடெங்கும் வரி ஏய்ப்பு செய்து பொருளியலை ஸ்தம்பிக்கச்செய்து வரிகொடுப்பவர்களிடமே மேலும் வரிபோடச்செய்பவர்களை நியாயப்படுத்தும் குரல் எவரால் ஏன் எழுப்பப்படுகிறது?

நான் பொருளியலைப்பற்றி எழுதக்கூடாது. ஆனால் இந்த மிகமிக ஆதாரமான விஷயங்களையாவது ஒரு மொழியில் எவராவது எழுதவேண்டும் அல்லவா? நான் இதில் சொல்லியிருப்பவை அனைத்துமே தொழிலதிபர்கள், பொருளியலாளர்களுடன் பேசியும் வாசித்தும் அறிந்தவை. ஒருவகையில் பொறுமையிழந்தே நான் இதை எழுதுகிறேன்

இந்த அடிப்படைகள்கூட ஏன் இங்கே பேசப்படவில்லை? ஒன்று நம்மவர்களுக்கு முற்போக்காகக் காட்டிக்கொள்வதில் இருக்கும் சபலம். மனிதாபிமான முற்போக்குவாதியாக நின்று அல்லாமல் கருத்தே சொல்லமாட்டார்கள். ஆனால் இங்கே எவருக்கும் இடதுசாரிப்பொருளியலில் ஆர்வமில்லை. அவர்கள் முதலாளித்துவப்பொருளியலில்தான் திளைப்பார்கள். நுகர்வார்கள். கருத்துச் சொல்லும்போது மட்டும் பஸ்தர்காடுகளில் துப்பாக்கியுடன் அலையும் மாவோயிஸ்டு மாதிரிப் பேச ஆரம்பிப்பார்கள். கண்ணீர் மல்குவார்கள். கொந்தளிப்பார்கள். அடடா என்ன ஒரு நல்ல மனசு என நாம் நெகிழவேண்டும்.

இந்தப் பாவனை வழியாக தங்கள் பிழைகளை மறைத்துக்கொள்ள முடியும். ஆகவே அதுவே பெரும்பான்மைக்குரலாக ஒலிக்கிறது. இத்தனை இடதுசாரிகள் இருந்தும் ஏன் கம்யூனிஸ்டுகள் இங்கே வைப்புத்தொகை இழக்கிறார்கள் என்பதை சிஐஏ நினைத்தால் ஃபோர்டு பவுண்டேஷன் வழியாக காசுகொடுத்து ஆய்வுசெய்து கண்டுபிடிக்கலாம்

இன்னொன்று மோடிவெறுப்பு. அதற்கு அரசியல்காரணங்கள் உண்டு. இடதுசாரிகளுக்கும் திராவிட இனவாதிகளுக்கும் தமிழ்த்தேசியப்பிரிவினையாளர்களுக்கும் அது ஒரு மனச்சிக்கலாகவே ஆகிவிட்டிருக்கிறது. மோடியை ஒரு லிபரல் அரசியலாளர் எதிர்க்க எல்லா காரணமும் உண்டு. அதை என்னாலும் ஏற்கமுடியும். ஆனால் மோடி இந்தியாவை அழிப்பதற்காக மட்டுமே முயல்கிறார், அவர் செய்வது ஒவ்வொன்றும் குற்றம் என்னும் மனநிலை மிக அசிங்கமானது.

சொல்லப்போனால் அவரை மேலே கொண்டுவந்ததே இந்த மனநிலைதான். லிபரல்கள்  தர்க்கமற்ற வெறுப்பைக் கக்கி அவர்கள் வெறுப்பவர்களை மக்களுக்கு பிடித்தமானவர்களாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

கடைசியாக ஒன்று. மோடி இந்தியாவை அழிப்பதற்காக மட்டுமே வந்தவர் என்னும் வகையில் ஏராளமான கட்டுரைகளைக் காணநேர்ந்தது .ஒரு பத்தி வாசித்ததுமே கீழே பார்ப்பேன். எழுதியவர் எவர் என. இஸ்லாமியப் பெயர் இருக்கும். பொருளாதாரநிபுணர், அரசியல் ஆய்வாளர், இதழாளர், எழுத்தாளர், வாசகர் என பல அடையாளங்கள். ஆனால் கருத்தும் உணர்ச்சியும் ஒன்றே.

மோடியை இஸ்லாமியர் வெறுப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இது ஒரு
பொருளியல்நடவடிக்கை. இதன்மேல் கொள்ளும் கருத்துகூட அந்த வெறுப்பால்தான் தீர்மானிக்கப்படவேண்டுமா என்ன? ஒரு பொருளியல் விஷயத்தில் ஆயிரம்பேரில் நாலுபேருக்காவது மாற்றுக்கருத்து இருக்காதா என்ன? சரி, நான் மோடியை வெறுக்கிறேன், ஆனால் இந்தப் பொருளியல் நடவடிக்கையில் இன்னின்ன சாதக அம்சங்கள் உள்ளன என்று சொல்லலாமே. ஒருவர்கூடவா இருக்கமாட்டார்? அத்தனை சிந்தனைகளும் அடிப்படையான மதநோக்கில் இருந்துதான் வந்தாகவேண்டுமா?

இறுதியாக மீண்டும் சொல்கிறேன். இது ஒர் வலதுசாரி அரசு. இதற்குச் சில பொருளியல்வழிமுறைகள் உள்ளன. அதனடிப்படையில் அது ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. அது பலன் தரலாம், தோல்விகூட அடையலாம். அதை பொருளியல்கொள்கையில் எதிர்தரப்புகொண்டவர்கள் விமர்சிக்கலாம்.மாற்றுவழிகளை முன்வைக்கலாம். அது இயல்பு

ஆனால் இங்கு நடந்தது அதுவல்ல. இங்கு நடந்தது அந்த முயற்சி
தோற்று அதன் விளைவாக இந்தியப்பொருளியல் அழிந்து அதன் பழியையும் அரசின் மேல் சுமத்த வேண்டும் என எதிர்தரப்பினர் கொண்ட கீழ்மை மிகுந்த வேகம். அதற்காக அவர்கள் செய்துவரும் பொய்ப்பிரச்சாரம், பீதிகிளப்பல். அந்த வெறியில் இந்தியாவை அழிக்கும் கறுப்புப்பணப் பொருளியலுக்கு ஆதரவாகவே  நம் அறிவுஜீவிகள் களமிறங்கிய கீழ்மை.

அதில் இடதுசாரிகள் ஈடுபட்டமை மிகமிக வருத்தம் தரக்கூடியது.
இடதுசாரிகளின் இந்தச் சரிவு ஒரு பெரும் அறவீழ்ச்சி.அதற்கப்பால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

நன்றி.....திரு ஜெயமோகன்.

உங்களுக்கு ஏதேனும் இந்த பதிவு தொடர்பாக கருத்து முரண்பாடுகள் இருந்தால் அதனை விமர்சன பெட்டியில் தெரிவியுங்கள்.

Saturday 19 November 2016

இயற்கை மருந்து-பூனமயக்கி


என்ன பேரு புதுசா இருக்குனு நினைக்குறீங்களா....
ஆனா இது உங்கள் வீட்டை சுற்றி வளர்ந்து கிடக்கும் செடி தான்.
என்னடா புதிர்போடுறேனு நினைக்காதீங்க....

ஆமாங்க.....இதன் இன்னொரு பெயர் என்னனு தெரியுமா...?

குப்பைமேனி(Acalypha indica)

இந்த குப்பைமேனி செடியின் தாயகம் இந்தியா.ஆனால் இன்று உலகம் பரவிக்கிடக்கிறது. இது இந்த இடத்தில் தான் வளரும் என்றில்லை;அனைத்து இடங்களிலும் வளரும் தன்மை உடையது.இந்த செடியினால் நமக்கு என்ன பயன் என்று பார்ப்போம்.

இந்த செடியில் அப்படி என்னதான்
இருக்கு.....

டிரைஅஸிட்டோனமைன்
அகாலிஃபமைடு
காலிபோல் அஸிடேட்
அகாலிஃபைன்
அல்கலாய்ட்ஸ்
கெம்ஃபெரால்
சயனோஜெனிக் குளுகோசைட்ஸ்

எந்ததெந்த பிரச்சனைகளுக்கு இது மருந்தாகிறது...?

தலைமுடி வளர
பொடுகு
இருமல்
சளி
தலைவலி
நிமோனியா
காதுவலி
சிறுநீரக பிரச்சனை
மலசிக்கல்
பாம்புக்கடி
படுக்கைப் புண்
வயிற்றுப்போக்கு
வாத நோய்
ஆஸ்துமா
தலைவலி
சித்தப்பிரமை
சொறி
சிரங்கு
விஷக்கடி
நாள்பட்ட புண்
மூட்டுவலி
வெறிநாய்க்கடி

இதுதவிர வயிற்றுப் பூச்சிகளுக்கு
எதிராகவும்,மலமிளக்கியாகவும்,பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது.

எப்படி பயன்படுத்தலாம்.....?

இதன் இலையை மை போல அரைத்து அதனுடன் நல்லெண்ணெய்,மஞ்சள் தூள் விட்டு காய்ச்சி வடித்து கிடைக்கும் எண்ணெய் தைலத்தை உடம்பில் தேய்த்து பயன்படுத்தலாம். இல்லையென்றால் நேரடியாக பேஸ்ட்டாக அரைத்து உடலில் பூசிக்கொள்ளலாம்.இதன் கீரையை விழுதாக அரைத்து விழுங்கலாம்.

இன்றைய இயற்கை மருந்து பகுதியில்
நம் வீட்டை சுற்றி வளரும் பூனமயக்கி செடியின் மருத்துவ நன்மையினை தெரிந்திருப்பீர்கள்.

அடுத்த பதிவில் இன்னொரு செடியின் மகத்துவத்தை சொல்றேன்.

அதுவரை காத்திருங்கள்...

Friday 18 November 2016

இயற்கை மருந்து-நொச்சி


நொச்சி என்றதும் நம் நினைவுக்கு வருது கொசுக்கள்.

என்னடா.....கொசுக்களுக்கும்
இதற்கும் என்ன தொடர்பு என கேட்குறீங்களா.....?

ஆமாங்க....
கொசுக்களின் எமன் என்றால்
நொச்சி தான்.ஓட ஓட விரட்டும்.

அதையும் மீறி தன் மேல் உட்காரும் கொசுக்களை மலடாக்கி வீரியம் இழக்க செய்யும் வல்லமை மிக்கவை.

மேலும் பல்வேறு பூச்சிகளை வீட்டில் மட்டுமல்லாது,தானியங்களையும் அண்டவிடாது செய்யும் சக்திமிக்கது.

இத்தகைய நொச்சி மனிதனை கொசுக்களிடம் இருந்து மட்டுமல்ல, பல்வேறு நோய்களிடம் இருந்து காப்பாற்றுகிறது என்றால் நம்பமுடிகிறதா....?

நம்புங்கள்........அதானே உண்மை.

நொச்சி (Vitex negundo) செடி
என்பது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பரந்துபட்டு கிடக்கின்றது.குறிப்பாக இந்த செடி இயல்பாக நீர்நிலைகள், காட்டுப்பகுதிகள்,வயல்வெளி
ஓரங்கள்,சாலை ஓரங்கள் என அனைத்துப்பகுதிகளிலும்
காணமுடியும்.இவை புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் தன்மை கொண்டவை.

விவரம் தெரிந்தவர்கள் இதனை
பயன்படுத்தி உடலினை பல்வேறு நோயில் இருந்து தற்காத்து கொள்கிறார்கள்.

விவரம் தெரியாதவர்கள் இன்னும்
உடலுக்கு ஒவ்வாத மாத்திரைகளையும்,
செயற்கை  கொசு விரட்டிகளையும் பயன்படுத்தி மேலும் உடலை பாழ்படுத்தி கொள்கிறார்கள்.

இவற்றின் முழு உடல் பாகங்களும், அதாவது வேர்,தண்டு,விதை,பூ,கனி உட்பட அனைத்தும் மனிதனுக்கு பயனுள்ளவை என்பதனை ஒருபோதும் மறக்காதீர்கள்.


என்ன வேதிப்பொருள்கள் இந்த செடியில் இருக்கு.......

காஸ்டிஸின்
ஐஸோ ஓரியென்டின்
லுடியோலின்
சபினேனே
லினாலூல்
கிரிஸோபினோல்-D
லைனோலியிக் அமிலம்
ஒலியிக் அமிலம்
பால்மிடிக் அமிலம்
பிரஃக்டோஸ்
பி-ஹைட்ரொபென்சோயிக் அமிலம்
நெகுண்டோசைடு
கரோட்டின்
குளுகோசைடு
குக்குபின்
நிசிண்டாசைடு
வைட்டமின்-c
குளோபுலால்
ஆல்பா-குஆயினே

எதற்கு இது மருந்தாகிறது........?

காய்ச்சல்
தலைவலி
சளி
காசநோய் புண்கள்
காலரா
வயிற்றுப்போக்கு
கல்லீரல் நோய்கள்
வயிற்றுவலி
பசியின்மை
கணைய வீக்கம்
குடல்வலி
கண்நோய்
ஆஸ்துமா
மூச்சுக்குழல் அலற்சி
வீக்கங்கள்
வெண்குஷ்டம்
தோல்வியாதி
சிறுநீர்ப்பை எரிச்சல்
மூட்டுவலி
நீர்க்கோர்வை
மாதவிடாய் கோளாறுகள்
பால்வினை நோய்கள்
நாள்பட்ட புண்கள்

மேலும் இந்த செடி, நம் உடலுக்கு குளிர்ச்சி தருவதாக,கிருமி நாசினியாக,தலைமுடி வளர்தலை ஊக்குவிப்பானாக,குடல்
பூச்சிக்கொல்லியாக மற்றும் பூச்சிவிரட்டியாகவும் பயன்படுகிறது.

எப்படி பயன்படுத்துறாங்க நம் மக்கள்......?

நொச்சி இலை சாற்றை ஏதோ ஒரு எண்ணையுடன் சேர்த்து காய்ச்சி,பின் உடம்பில் தேய்த்து தங்கள் உடல் வலி போக்குகிறார்கள்.

சூடான நீரில் இதன் இலையை போட்டு அல்லது இதன் இலைச்சாற்றை விட்டு ஆவி பிடிக்கிறார்கள்.

கொசுவை விரட்ட வீட்டு வாசல்களில் வளர்க்கிறார்கள்.மேலும் குப்பைமேனி போன்ற மற்ற இயற்கை செடிகளோடு சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து அதனை கொசுவிரட்டும் வில்லைகளாக பயன்படுத்திகிறார்கள்.

ஒருசில இடங்களில் பூண்டுடன் இதனை சேர்த்து,அரைத்து பூச்சி விரட்டியாக பயன்படுத்துகிறார்கள்.

எது எப்படியோ.....
நம் வீட்டை சுற்றி இந்த செடியை வளர்த்தால் நம்மை பூச்சிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளலாம்.

அதனை இன்றே செய்வோமாக.....

சரி நண்பர்களே......
இந்த இயற்கை மருந்து பகுதி வாயிலாக நொச்சி செடியின் மகத்துவத்தை கொஞ்சம் அறிந்திருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

அடுத்த பதிவில் மற்றொரு செடியின் மகத்துவத்தை சொல்கிறேன்..

அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்....


கடவுள் இருக்கான் குமாரு- காமெடி குமாரு


ஜிவி பிரகாஷ் மற்றும் எம் ராஜேஷ் கூட்டணியில் வெளிவந்திருக்கும்
கடவுள் இருக்கான் குமாரு என்கிற நகைச்சுவை திரைப்பட விமர்சனத்தை காண பின்வரும் வீடியோ லிங்கினை கிளிக் பண்ணுங்க....
http://viid.me/q0SudV

Thursday 17 November 2016

இயற்கை மருந்து-பீநாறி சங்கு


என்னடா பெயரே....முகம் சுளிக்கிற மாறி இருக்குனு நினைக்குறீங்களா...

ஆமாங்க...இது மூக்கு பிடிக்கும் வாடை கொண்டாலும்,இதன் பூ,இலை,வேர் போன்றவற்றின் பயனோ பெரிது;
இது நம் எத்தனை பேருக்கு உண்மையிலேயே தெரியும்....?

நம் மூதாதையர்கள் செடிகளை எளிதில் அடையாளப்படுத்திக்கொள்வதற்காக வாசத்தை வைத்து இவ்வாறு அழைத்தனர்.

நாம் இதன் வாசத்தை வைத்து விலகி செல்வதால் தான்,இதன் பயன் நமக்கு தெரியாமல் போயிற்று.இதனால் மனிதனுக்கு பல பயன்கள் உண்டு.
அதனை படிப்படியாக காண்போம்...

இந்த பூக்கும் செடி பீநாறி சங்கு
(Clerodendrum inerme) இந்தியாவை பிறப்பிடமாக கொண்டது.இன்று உலகின் பல இடங்களில் அதுவும் குறிப்பாக கடற்கரை ஓரங்களில்,
வறட்சி மிகு இடங்களில் காணப்படுகிறது.


இதன் வாசத்தை கண்டு நெருங்கி செல்வோரை விட ஒதுங்கி செல்வோரே அதிகம் இது.

இந்தியாவில் மான்க்ரோவ் காடுகள் மற்றும் நம் தெருவில் சாலையோரங்களில் வளர்ந்து கிடக்கும். அதற்கு காரணம் உப்புத்தன்மை மற்றும் அதிக வெப்பம்( இதற்கு சொல்லவா வேண்டும் நம் நாட்டில்...)

சரி விசயத்திற்கு வருகிறேன்....

அப்படி என்னதான் இருக்கு இந்த செடியில்....

டேனின்
டெர்பெனோய்ட்ஸ்
பிலவனாய்ட்ஸ்
அல்கலாய்ட்ஸ்
ஹைடிரோகார்பன்ஸ்
நியோலிக்னின்
புரோடீன்
ஸ்டெராய்ட்ஸ்
அர்சோலிக் அமிலம்
வெர்பாஸ்கோசைடு
குயினோன்

மனுசனுக்கு எந்த விதத்தில் உதவுதுனு பார்ப்போம்....

தலைவலி
இருமல்
கீல்வாதம்
மூட்டுவலி
பக்கவாதம்
மன அழுத்தம்
ஆஸ்துமா
அஜீரணக்கோளாறு
வயிற்றுப்போக்கு
சொறிசிரங்கு
தோல் நோய்கள்
பூச்சிக்கடி
யானைக்கால் வியாதி
தசையில் வலி
கால்விறைப்பு (குறிப்பாக டெட்டனஸ் பாதிப்புக்கு உள்ளானவருக்கு) காய்ச்சல்
மஞ்சள்காமாலை

இதுபோக மலேரியா மற்றும் யானைக்கால் வியாதியை பரப்பும் கொசுக்களை நம்மை நெருங்கவிடாது செய்யும்.

நோய் பரப்பும் பாக்டீரியா,வைரஸ் போன்ற கிருமிகளை அழித்தொழிக்கும் சக்தியினை கொண்டது.

நம் நாட்டில் கிராமப்பகுதிகளில்
எப்படி பயன்படுத்துறாங்கனு
தெரியுமா....?

தண்ணீரில் இதன் இலையை போட்டு வேகவைத்து, அதன் கஷாயத்தை குடிப்பது.......

மிளகு,பெருங்காயம் சேர்த்து மெலிதா அரைத்து அதனை சாப்பிடுவது....

நல்எண்ணெயுடன் இதன் சாற்றை சேர்த்து பின்னர் மிதமாக சூடேற்றி, பின்னர் உடல் வலி போக்க தேய்த்துக்கொள்வது ..

சில நாடுகளில் இதன் சாற்றோடு
தேன் கலந்து மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

இத்தகைய மதிப்புமிக்க செடியினை மறந்தது நம் தவறே...
இனியாவது இதனை நினைவில்
வைத்துக்கொண்டு வாசத்தை வைத்து ஒதுக்காது,பயன்படுத்த முயற்சி செய்வோம்.

சரி நண்பர்களே.....
இன்று இயற்கை மருந்து பகுதியில்
பீநாறி சங்கு பற்றி விவரம் கொஞ்சமாவது தெரிந்து
கொண்டிருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

அடுத்த பகுதியில் நம்மை சுற்றி, நம்மால் மறக்கப்பட்ட செடி ஒன்றின் மருத்துவ பயனை சொல்கிறேன்.

அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்...

Wednesday 16 November 2016

மைக்ரோ-மர்மங்கள்(பிரெட்)-6


நோயுற்ற காலங்களிலும் சரி மற்றும் நம் விரும்புகிற உணவு கிடைக்காத இடங்களிலும் சரி,நம் பசிபோக்க உதவுவது பிரெட் என்று அழைக்கப்படக்கூடிய ரொட்டித்துண்டு
என்றால் அது மிகையாகாது.

அனைவராலும் நம்மிடம் உள்ள மாவினை கொண்டு எளிதில் செய்யக்கூடிய மிகவும் இயல்பான மாவுச்சத்து நிறைந்த உணவு.

சரி இந்த பிரெட் செய்வதற்கு மிக
முக்கிய பங்காற்றுவது ஈஸ்ட் என்று அழைக்கப்படக்கூடிய நுண்ணுயிரி தான் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா....

ஆம்....

இந்த ஒரு செல் நுண்ணுயிரியான ஈஸ்ட் துணையின்றி பிரெட் செய்வது மிகவும் கடினம்.

அவ்வாறு ஒருவேளை நாம் ஈஸ்ட் துணையின்றி பிரெட் செய்தாலும்,
பிரெட்டுக்கு உரிய இயல்பான சுவையோ,மிருதுவோ,மணமோ
கிடைக்கப்பெறாது.

ஆகவே தான் பிரெட் தயாரிப்பதற்கு என்று ஒரு வகை ஈஸ்ட் அதாவது சக்கரோமைசிஸ் செர்விஸியே
(Saccharomyces cerevisiae) பயன்படுத்தப்படுகிறது.


அப்படி என்ன தான் செய்யுது இந்த ஈஸ்ட்.....?

கடைகளில் கிடைக்க கூடிய இந்த ஈஸ்ட் க்ரானுலை சுடுதண்ணீரில் சிறிது நேரம் வைத்தால் போதும்.பின்னர் இந்த ஈஸ்ட் + நீர்க்கரைசலை நாம் விரும்புகிற மாவுக்கலவையுடன் சேர்த்து நன்றாக பிசைந்து சுமார் ஒன்றில் இருந்து மூன்று மணிநேரம் வைத்துவிட்டால் போதும்.

மூன்று மணிநேரத்திற்கு பிறகு மாவை பார்த்தோம் என்றால்,உப்பி மிருதுவாக இயல்புக்கு மாறாக சற்று அளவு பெரிதாக,உயர்ந்து இருக்கும்.

அந்த சமயம் நீங்கள் லேசாக எடுத்து சுவைத்து பார்த்தால் புளிப்பு சுவையுடன் இருக்கும்.

இதற்கு முழுமுதற்காரணம் ஈஸ்ட் மட்டுமே.....

இந்த ஈஸ்ட் தன்னுடைய சிறப்புமிகு நொதிகளை கொண்டு சர்க்கரை மூலக்கூற்றை உடைத்து
கார்பன் டை -ஆக்ஸைடை வெளியேற்றுகிறது.மேலும் சிறிது ஆல்கஹால்,கீடோன் ,எஸ்டர்,அமிலம் போன்றவற்றையும் வெளியிடுகிறது.

இவையே பிரெட் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்க செய்வதோடு, உப்புவதற்கு கார்பன் டை -ஆக்ஸைடு
காரணமாகிறது.இவையனைத்தும் நொதித்தல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இத்தகைய ஈஸ்ட் பிரெட் தயாரிப்பில் முக்கியமாக பங்கு பெறுவதால்
பிரெட் ஈஸ்ட் என்றும்,பேக்கர்ஸ் ஈஸ்ட் என்றும் அழைக்கப்படுகிறது.

சரி நண்பர்களே....பிரெட் தயாரிப்பில்
ஈஸ்ட் என்கிற நன்மை செய்யும்
நுண்ணுயிரியின் பங்கை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

அடுத்த மைக்ரோ-மர்மங்கள் பகுதியில் வேறு மர்மத்திற்கு விடை சொல்கிறேன்.

அதுவரை கொஞ்சம் பொறுமையாக காத்திருங்கள்........

Tuesday 15 November 2016

இயற்கை மருந்து-கற்றாழை


நம் வீட்டை சுற்றி வளரும் இயல்பான
செடி தான் கற்றாழை.
இது அஸ்ஃபோடெலிசீ தாவர குடும்பத்தை சேர்ந்தது.தண்டுகள் இல்லாத கற்றாழை செடிகளும் உண்டு.இது தரையிலிருந்து நேரடியாக ரோஜா இதழ் போன்ற அமைப்பில் வளரும் தன்மை உடையது.
வெவ்வேறு நிறங்களிலும் இவை காணப்படக்கூடியவை.

கற்றாழையில் கேப் கற்றாழை,
சோகோடிரைன் கற்றாழை, பார்படாஸ் கற்றாழை,குர்குவா கற்றாழை, ஸான்ஸிபார் கற்றாழை, யுகான்டா கற்றாழை,நேட்டல் கற்றாழை மற்றும் ஜஃபராபாத் கற்றாழை ஆகியவை தரம் வாய்ந்தவை.

இவையே தமிழில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட இந்த கற்றாழை இன்று இந்தியா,
பாகிஸ்தான்,வங்காளதேசம்,
பார்படோ தீவுகள்,சீனா,இத்தாலி,
வெனிசுலா,தென்னாப்பிரிக்கா,கிரீஸ் போன்ற பல நாடுகளில் அபரிமிதமாக இயல்பாகவும்,வணிக ரீதியாகவும் விளைவிக்கப்படுகிறது.

ஒரு சில ஆப்ரிக்க நாடுகளில் கற்றாழை மரமாக வளர்கிறது.


இதற்கு கன்னி,குமரி என்று பொதுவான சொல்வழக்கில் பெயர்கள் பல உண்டு.

இது வளர குறைந்த அளவு தண்ணீரே போதுமானது.ஆகவே தான் வறட்சி மிகுந்த நம் நாட்டில் இயல்பாக வளர்கிறது.

குறிப்பாக கிராம பகுதிகளில் தண்ணீர் ஊற்றாமலேயே சர்வ சாதாரணமாக வளர்ந்து காணப்படும்.ரயில் பாதை மற்றும் வயல்வெளி ஓரங்களில் இயல்பாக நீங்கள் காணமுடியும்.

நகரங்களில் பெரும்பாலும்
அழகிற்காக மற்றும் பாம்புகள் வீட்டை அண்டாமல் இருப்பதற்காக ஒருவகை தண்டு மெலிதாக இருக்கும் கற்றாழையை வளர்க்கிறார்கள்.


இன்றும் கூட இந்த செடியை விவரம் தெரிந்தவர் தவிர ஒருவரும் சீண்டுவாரில்லை.
ஆனால் அதுவே வெவ்வேறு வடிவங்களில் கற்றாழையை முன்னிலைப்படுத்தி வருகிற சோப்பு மற்றும் அழகுசாதனப்பொருள்கள் முதலியனவற்றை விலை கொடுத்து
வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

என்ன செய்றது....இது தானே நம் மக்கள் இயல்பு.

இதே இந்தியாவில் தான் இன்று முழுக்க முழுக்க வணிகரீதியாக தரமான கற்றாழையை பயிரிட்டு பணம் பார்ப்போர் பலரும் உண்டு.

இது இயல்பாக கசக்கும் தன்மை கொண்டதால் பெரும்பாலானோர் விரும்பி மருந்தாகவோ,உணவாகவோ எடுத்துக்கொள்வதில்லை.

சரி.....அப்ப எப்படி தான் பயன்படுத்துறது...?

காற்றாழைகளில் சிறப்புமிக்கது சோற்றுக்கற்றாழை.இதன் தண்டை நன்கு கழுவிவிட்டு கனமான மேல் தோலை சீவினால் வழவழப்பான ஜெல் போன்ற கூழ்மபொருள் கிடைக்கும்.
அதனை நீங்கள் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாக பல இயற்கையான பொருள்களுடன் கலந்தோ உண்ணலாம் அல்லது பயன்படுத்தலாம்.

இதுமட்டுமல்லாது பூ , மடல் மற்றும் வேர் ஆகியனவும் மருத்துவ குணம் மிக்கவையே.


காற்றாழையில் என்ன இருக்குனு பார்க்கலாம்...

பார்பலோயின்
அலோ எமோடின்
முசபார்
அலோஸோன்
அலாய்ன்
ஆலோக்டின்பி
ஆந்த்ரோகுயினோன்
குயினோன்
பார்பலின்
நட்டாலியன்
பென்டோசைட்ஸ்
ரெசின்
சப்போனின்
கால்சியம்
குளோரின்
சோடியம்
பொட்டாசியம்
மாங்கனீசு
ஜிங்க்
ஜெர்மானியம்
வைட்டமின்-C
வைட்டமின்-A
வைட்டமின்-E
வைட்டமின்-பி1
வைட்டமின்-பி2
வைட்டமின்-பி6
வைட்டமின்-பி12
பாலிசாக்கரைடு
யூரிக் அமிலம்

நமக்கு அப்படி என்ன உதவி செய்கிறது...?

வலி நிவாரணியாக.....
சருமத்தின் ஈரத்தன்மையை பாதுகாக்கிறது...
அழகுச் சாதனங்கள் தயாரிக்க...
மருந்துப் பொருட்கள் தயாரிக்க...
கதிர் வீச்சுகளின் விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது...
சவரம் செய்வதற்கான கூழ்மங்கள் தயாரிக்க...
ஷாம்பூ தயாரிக்க...
மலமிளக்கி
வெட்டுக்காயம்
இருமல்
சளி
அலர்ஜி
வயிற்றுப்புண்
மாதவிலக்கு பிரச்சனை
குடல்புண்
சோரியாசிஸ்
பூச்சிக்கடி
நெஞ்செரிச்சல்
பொடுகு பிரச்சனைக்கு...
மூட்டு வலி
சர்க்கரை நோயிற்கு மருந்தாக..
பல் தொடர்பான நோயிற்கு மருந்தாக..
வைரல் நோய்த்தொற்றுக்கு மருந்தாக...
என பலவிதங்களில் மருந்தாக நமக்கு
பயனாகிறது.

பாருங்க மக்களே....
நம்மைச்சுற்றி வளரும் கற்றாழையின் மகத்துவத்தை, இந்த இயற்கை மருந்து பதிவின் மூலம் அறிந்திருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

அடுத்த பதிவில் மற்றொரு இயற்கை மருந்து பற்றி சொல்கிறேன்.

அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்....